தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரை மீண்டும் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சிகளில் இஸ்ரோவுடன் நாசாவும் இணைந்துள்ளது.
இந்திய விஞ்ஞானிகளின் மிகப்பெரும் கனவாக இருந்த `சந்திரயான்-2′ விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
ஒரு மாத கால பயணத்துக்குப் பிறகு நிலவுக்கு மிக அருகில் சென்றதும் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டது.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் அதைச் சரி செய்யும் முயற்சியில் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்திரயான்-2 திட்டம் சற்று பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் அது 95 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாகவும், நிலவில் இருக்கும் ஆர்பிட்டரை வைத்து இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கலிபோர்னியாவில் உள்ள ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வகத்தில் (Jet Propulsion laboratory) இருந்து விக்ரம் லேண்டருக்கு ரேடியோ அதிர்வெண்களை அனுப்பியிருந்தது நாசா. `இஸ்ரோவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆழமான விண்வெளி நெட்வொர்க் மூலம் விக்ரமை தொடர்புகொள்ள முயற்சிகள் நடந்துவருகின்றன’ என `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகத்துக்கு நாசா தெரிவித்துள்ளது .
“தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்துவருகின்றன. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் சூரிய ஒளி இருக்கும்வரை அதாவது செப்டம்பர் 20, 21-ம் தேதி வரை இந்த முயற்சிகள் நடக்கவுள்ளன” என இஸ்ரோ விஞ்ஞானி ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.
சந்திரயான்-2 நிலவில் இறங்கியிருந்தால் நிலவின் ஒரு பகல் பொழுது(Lunar Day) மட்டுமே அங்கு ஆராய்ச்சி செய்திருக்கும்.
அதாவது 14 நாள்கள், அதன்படி வரும் செப்டம்பர் 20, 21-ம் தேதியோடு நிலவின் ஒரு பகல் பொழுது முடிகிறது. அதற்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் முயற்சிக்கு உதவும் வகையில் நாசாவும் இணைந்துள்ளது.