துருக்கியப் படையினரை எதிர்கொள்வதற்காக சிரிய அரசாங்கத்துடன் குர்தியர்கள் உடன்பாடொன்றைச் செய்துள்ளனர் இதன்படி துருக்கிய படையினரை தடுப்பதற்காக சிரியா தனது எல்லையில் சிரிய படையினரை நிறுத்தவுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கப் படையினருடன் இணைந்து போராடிய குர்திஷ் படையினரை பயங்கரவாதிகள் என துருக்கி கூறுகிறது.
சிரிய துருக்கி எல்லையிலிருந்து அமெரிக்கப் படையினரை வாபஸ் பெற ஆரம்பித்தவுடன் குர்திஷ் படையினருக்கு எதிரான பாரிய தாக்குதல்களை துருக்கி கடந்த வாரம் ஆரம்பித்தது.
இந்நிலையில் சிரியாவின் வட பகுதியை நிர்வகிக்கும் குர்தியர்கள் தலைமையிலான நிர்வாகமானது, தாம் சிரிய அரசுடன் உடன்படிக்கையொன்றை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தப்படி, துருக்கியுடனான எல்லை முழுவதும் சிரிய படையினர் நிறுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.