இது தொடர்பில் தெரியவருவதாவது, சுதந்திரபுரம் கொலனி பகுதியில் தனியார் ஒருவரின் காணியை துப்புரவு நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, மண்ணில் புதையுண்ட நிலையில் மனித எச்சங்கள் நேற்றுமுன்தினம் தென்பட்டுள்ளன.
இதனையடுத்து, புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தினை அடையாளப்படுத்தியதுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இது தொடர்பில், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்துக்கு பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில் அதற்கமைய, குறித்த பகுதியில் இன்று அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது குறித்த மனித எச்சங்கள் காணப்படும் இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவுக்கமைய, முல்லைத்தீவு நீதிவான் மற்றும் அரச தடயவியல் அதிகாரிகள் முன்னிலையில் இன்று காலை 9 மணியளவில் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் அமரசிங்க மெட்ரோ நியூஸுக்கு தெரிவித்தார்.