பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சு நடத்த நாம் தயாரில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் கட்சிகளின் தலைவர்கள் அல்ல. நாம் தலைவர்களுடன் பேசவே விரும்புகின்றோம் எனவும் அவர் குறிபபிட்டார்.
வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் பிரதான தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம் எடுத்துள்ள நிலையில் பிரதான வேட்பாளர்கள் இந்த விடயத்தில் ஈடுபாடில்லாத வகையில் செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென வினவியமைக்கு கருத்து தெரிவுக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருடனும் பேச நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுகொள்ள வேண்டும். இதில் அவர்கள் தான் எம்முடன் பேச வேண்டுமே தவிர நாம் எவர் பின்னாலும் சென்று அவர்களுடன் பேச வேண்டிய அவசியம் எமக்கில்லை. எங்களின் ஆதரவு தேவை என்றால் அவர்கள்தான் தேடிவரவேண்டும்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாகிய எமது நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள பிரதான கட்சிகள் ஆவலாக உள்ளன . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினமான 31ஆம் திகதிக்கு முன்னர் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம். அதற்கிடையில் நாம் ஐந்து தமிழ் கட்சிகளும் மீண்டும் இந்த வாரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராக உள்ளோம் என்றார்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறுகையில்,
நாம் முன்வைத்த கோரிக்கைகள் எமது அடிப்படை கோரிக்கைகளாகும். இதனை நாம் இன்று நேற்று தேர்தலுக்காக கூறுவது அல்ல. கடந்த 70 ஆண்டுகளாக நாம் எமது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம். அவ்வாறு இருக்கையில் இன்று இனவாத அரசியலை செய்பவர்கள் எம்மை சாடி அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். எவ்வாறு இருப்பினும் எமது கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்கள் நிராகரிக்கின்றார்கள் என்றால் அதில் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் என்ன நிலைப்பாட்டில் இருந்தாலும் அவர்கள் கட்சியின் தலைவர்கள் அல்ல. கட்சியின் தலைவருடன் பேசவே நாம் நினைக்கின்றோம். இந்த 13 அம்சக் கோரிக்கை விடயத்தில் ஒரு சில காரணிகளை ஏற்றுக்கொண்டால் சிங்கள வாக்குகள் இழக்கப்படும் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. ஆனால் நியாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய காரணிகளையாவது அவர்கள் ஏற்றுகொள்ள வேண்டும். குறிப்பாக புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் அவர்களின் நிலைப்பாடு ஆரோக்கியமான ஒன்றாகவே இருக்கின்றது.
அதனை நிராகரிக்கவில்லை. அதேபோல் வடக்கு கிழக்குக்கு முன்னெடுக்க வேண்டிய விடயங்களில் அவர்கள் எதனையும் நிராகரிக்கவில்லை. அவ்வாறு இருக்கையில் தலைவர்கள் எம்முடன் பேசினால் நாம் அவர்களுடன் பேசி ஒரு நிலைப்பாட்டை எட்ட முடியும்.
இவர்கள் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதற்காக நாம் தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்த மாட்டோம். மக்களும் வாக்களிக்காமல் இருக்கப்போவதில்லை. ஆனால் ஆரோக்கியமான ஒரு நிலைப்பாட்டை அவர்கள் முன்னெடுக்க நாம் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றார்.