கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் ஆரம்பம் முதலே விசாரணையாளர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் நிறைவேற்று அதிகாரம் படைத்தோர் உள்ளிட்டோரால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக சி.ஐ.டி. கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு தெரிவித்தது.
எனினும் இந்த பாரதூரமான குற்றச் செயலின் சந்தேக நபர்களுக்கு பதவி உயர்வுகளும் விஷேட வரப்பிரசாதங்களும் அந்த தரப்பினரால் வழங்கப்பட்டதாகவும் இந்த விவகாரத்தின் விசாரணை அதிகாரியான சி.ஐ.டி. பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா நீதிவானுக்கு அறிவித்தார்.
ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றில் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன முன்வைத்த வாதங்களுக்கு பதிலளிக்கும் போதே, விசாரணை அதிகாரியான நிசாந்த சில்வா இதனை தெரிவித்தார்.
பாதிக்கப்ப்டட திறந்த நீதிமன்றில் பின்வருமாறு தனது வாதங்களை முன்வைத்தார்.
‘ இவ்வழக்கின் 16 ஆவது சந்தேக நபர் வசந்த கரன்னாகொடவைக் கைது செய்ய கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கரன்னகொட தன்னை கைது செய்வதை தடுக்குமாறு உயர் நீதிமன்றை அனுகினார்.
அப்போது உரிய விடயங்களை உயர் நீதிமன்ருக்கு அறிவித்து கரன்னாகொடவைக் கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்காத சட்ட மா அதிரப் திணைக்களம், தற்போது சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு நீதிமன்றம் ஊடாக அழைப்பானை கோரி கரன்னஎகாடவை மன்றுக்கு அழைக்குமாறு கூறுகின்றனர்.
இந்த நாட்டில் சாதாரண ஒரு மனிதனுக்கு கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், அவருக்கு பிணைக் கூட கிடைக்காது. எனினும் இங்கு கரன்னகொடவுக்கு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரைக் கைது செய்யக் கூட முடியாது.
இதன்பிறகு கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் ஒருவருக்கு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யபப்டும் வரை மேலும் ஓரிரு கொலைகளைச் செய்துகொண்டு வீட்டில் இருக்கலாம்.
சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த சி.ஐ.டி. அதிகாரிகளையே அசெளகரியத்துக்கு இவ்வாறான கோரிக்கைகள் ஊடாக உட்படுத்துகின்றது.
தேவையான போது தேவையான ஒரே நிலைப்பாட்டில் இருக்காமல் பின்னர் தமது குறைகளை மறைத்துக்கொள்ள இவ்வாறு செயற்படுகின்றனர்.’ என அச்சலா சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன வாதிட்டார்.
இதன்போது திறந்த மன்றில் பேசிய நீதிவான் ரங்க திசாநாயக்க,
‘ இது பந்தை மாற்றும் ஒரு நடவடிக்கை. உயர் நீதிமன்றை மீறி தீர்மானம் எடுக்க என்னால் முடியாது. நான் ஒரு போதும் சட்ட விரோத உத்தரவுகளை தரவும் மாட்டேன்.
தேவையான போது தேவையான நிலைப்பாட்டை எடுக்காது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருந்தால் இவ்வாறான நிலை தான் ஏற்படும். சட்ட ம அதிபர் திணைக்களத்துக்கு இம்மன்றுக்கு வந்து கோரிக்கை முன்வைக்க முடியும். அப்போது நான் அது தொடர்பில் ஆராயலாம். ” என தெரிவித்தார்.
இதனையடுத்து சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன தொடர்ந்து தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த ஆரம்பித்தார்.
‘ இல்லை. இத்தனைக்கும் சட்ட மா அதிபர் சார்பில் எவரும் அவ்வாறான கோரிக்கையுடன் மன்றுக்கு வரப்போவதில்லை.
அவர்களுக்கு இந்த முறைப்பாடு மீது அவ்வளவு அக்கறை இல்லை. சந்தேக நபர் ஒருவரை இந்த விவகாரத்தில் கைது செய்ய முற்படும் போதும் அல்லது இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொண்டும் அவர்கள் ஒரு போதும் செயற்பட்டதில்லை.
முறைப்பாட்டாளர் தரப்புக்கு உரித்தான விடயம் ஒன்றின் தெளிவைப் பெற அறிவித்தல் விடுத்தே அவர்களை நீதிமன்றுக்கு அழைக்க வேண்டியிருந்தது.
இந்த வழக்கில் தற்போது இரு சாட்சியாளர்கள் மரணித்தும் காணாமல் போயும் உள்ளனர். ஒருவரின் மரணத்துக்கு காரணம் நீரில் மூழ்கலாகும். கடற்படை வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்பதை சாதாரணமாக எப்படி எடுத்துக்கொள்வது.,
இவ்வழக்கில் விஜயகாந்தன் எனும் சாட்சியாளர் தற்போது காணாமல் போயுள்ளார். அந்த சாட்சியாளர் இம்மன்றுக்கு அழைத்து வரப்ப்ட்டு அவரது சாட்சியம் மாற்றப்பட்டே கைதானோர் பிணையைப் பெற்றுக்கொன்டனர்.
இன்று அவர் காணாமல் போயுள்ளார். இது தான் சாட்சியாளர்களை வேட்டையாடுவது. அதனால் இதனை உங்கள் கவனத்துக்கு கொன்டுவருகின்ரேன். உரிய நடவடிக்கைகளை எடுங்கள் ‘ என்றார்.
இதனையடுத்து சட்டத்தரணி அச்சலா சென்விரத்ன முன்வைத்த விடயங்களுக்கு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா பதிலளிக்கும் விதமாக தெளிவுபடுத்தினார்.
‘ கனம் நீதிவான் அவர்களே, உயிரிழந்துள்ள செனவிரத்ன எனும் சாட்சியாளர் இவ்வழக்கில் மிக முக்கியமான சாட்சியாளர்.
அவரது மரணம் தொடர்பில் நாம் தேடிப் பார்த்தோம். அது சந்தேகத்துக்கு இடமான மரணம் அல்ல. அவரது மனைவியின் வாக்கு மூலம், அரச சட்ட வைத்திய அதிகரையின் சாட்சியம் ஊடாக அதனை நாம் உறுதி செய்தோம்.
எனினும் செனவிரத்ன, சி.ஐ.டி.க்கு வாக்கு மூலம் வழங்கிய பின்னர் இவ்வழக்கின் 2 ஆவது சந்தேக நபரான அப்போதைய கன்சைட் சித்திரவதைக் கூட பொறுப்பாளர் கொமாண்டர் ரணசிங்க தொலைபேசியில் குறித்த சாட்சியாளரை அச்சுறுத்தியுள்ளார். அவரையும் அவர் குடும்பத்தையும் கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். இது தொடர்பில் செனவிரத்னவின் மனைவி எமக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
உண்மையில் பாதிக்கப்பட்டுள்ள இந்த அப்பாவி பெற்றோர்களின் பொறுமை காரணமாகவே இம்மன்றில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் விசாரணைகள் இவ்வளவு வருடங்களாகவும் நடக்கின்றன. இதுவே இம்மன்றின் சட்டத்தரணி ஒருவரின் பிள்ளைக்கோ வேறு ஒருவரின் பிள்ளைக்கோ இந்த கொடுமை நேர்ந்திருந்தால் நிலைமை மாற்றமாக இருந்திருக்கும்.
வயிறுகளை வெட்டி, குடல்களை வெளியே எடுத்து கடலுக்குள் சடலங்களை மூழ்கடித்து கொல்வதென்பது இலகுவான குற்றமாக எடுத்துக்கொள்ள முடியாதது.
எமக்கு இந்த விசாரணைகளை ஆரம்பித்தது முதல் செயற்பட விடவில்லை. நிறைவேற்று அதிகாரம் உள்ளவர்கள் முதல் இடையூறு செய்தனர். தற்போதும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
சந்தேக நபர்களுக்கு வரப்பிரசாதம், பதவி உயர்வு கொடுக்கும் நிலையில், விசாரணையாளர்களான எம்மையும் சாட்சியாளர்களையும் அச்சுறுத்துகின்றனர்.
அத்துடன் கடத்தப்பட்டவ்ர்களில் அடங்கும் ஜோன் ரீட்டை கடத்தும் போது சேர்த்து எடுத்து செல்லப்பட்டிருந்த வேனையும் கடற்படையினர் பயன்படுத்திய நிலையில் மீட்டு அதனையும் இம்மன்றில் ஒப்படைக்கின்றோம்’ என தெரிவித்தார்.
இதனையடுத்து சாட்சியாளர்கள் தொடர்பில் விஷேட கவனமெடுத்த நீதிவான்’ அனைத்து சாட்சியாளர்கள் தொடர்பிலும் அவதானமாக இருங்கள்.
அவர்களுக்கு ஏதும் ஒரு அச்சுறுத்தல், அழுத்தம் ஏற்படுமாக இருப்பின் அது தொடர்பில் உடனடியாக நீதிமன்ருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கையை உடன் எடுங்கள்’ என சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார். வழக்கை எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.