“அதிகாரி, பயணிகளின் வெப்பநிலை அளவைக்கூட பார்க்கவில்லை. செல்ஃபோனில் பிஸியாக இருக்கிறார். பெயரளவிற்கு சோதனை நடைபெறுகிறது.”
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தது. இதனிடையே, ரயில் நிலையத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரி ஒருவரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில், பயணிகளின் உடல் வெப்பநிலையைக் கணக்கிட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார்.
அந்த அதிகாரி, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்ஃபோன் பேசியபடி அலட்சியமாகப் பரிசோதனைக செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. அந்த அதிகாரியின் நடவடிக்கையும் சர்ச்சைக்குள்ளானது.
ಬೇಜವಾಬ್ದಾರಿ ಹಾಗೂ ಕರ್ತವ್ಯ ನಿರ್ಲಕ್ಷ ತೋರಿದ ಇವರನ್ನು ಸೇವೆಯಿಂದ ಅಮಾನತುಗೊಳಿಸಲಾಗಿದೆ. ತಮ್ಮ ಹಿತವನ್ನು ಬದಿಗಿರಿಸಿ ಹಗಲು-ರಾತ್ರಿ ಜನಸೇವೆ ಮಾಡುತ್ತಿರುವ ವೈದ್ಯರು ಹಾಗೂ ಆಸ್ಪತ್ರೆಯ ಸಿಬ್ಬಂದಿಗಳ ಕಾರ್ಯ ನಾಗರಿಕ ವಲಯದಲ್ಲಿ ಪ್ರಶಂಸೆಗೆ ಒಳಗಾಗುತ್ತಿದೆ. ಇಂತಹ ಸಮಯದಲ್ಲಿ ಈ ಅಧಿಕಾರಿಯ ಬೇಜವಾಬ್ದಾರಿ ನಡೆ ಖಂಡನಿಯ. https://t.co/vs5CjO7CAi
— B Sriramulu (@sriramulubjp) March 21, 2020
வீடியோவை நெட்டிசன் ஒருவர், “தும்கூர் ரயில் நிலையத்தில் இப்படித்தான் ஸ்கிரீனிங் நடைபெறுகிறது. அந்த அதிகாரி பயணிகளின் வெப்பநிலை அளவைக்கூட பார்க்கவில்லை.
செல்ஃபோனில் பிஸியாக இருக்கிறார். பெயரளவிற்கு சோதனை நடைபெறுகிறது” என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார். மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகளையும் டேக் செய்திருந்தார். நெட்டிசன்களின் கமென்ட்டுகளில், தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.
கர்நாக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீ ராமலுவின் கவனத்துக்கு இந்தச் செய்தி சென்றுள்ளது. அதையடுத்து, இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், “கவனக்குறைவு மற்றும் சரியாகப் பணி செய்யாததற்காக, அந்த அதிகாரி இடைநீக்கம் செய்யப்படுகிறார். மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரத்துறை பணியாளர்கள் மக்களுக்காக இரவும் பகலும் உழைத்துவருகின்றனர். இதுபோன்ற சமயங்களில் இத்தகைய அலட்சியமான செயல்கள் கண்டிக்கத்தக்கது” என ட்வீட் செய்துள்ளார்.