இந்தியாவில் ஊரடங்கு நெருக்கடி காரணமாக மாணவர் ஒருவர் தனது நண்பரை பயணப் பையில் வைத்து அடைத்து எடுத்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளியில் இருந்து வருபவர்களை உள்ளே அனுமதிப்பது இல்லை.
மங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு வினோதமான சம்பவத்தில், ஒரு மாணவர் தனது நண்பரின் குடியிருப்பில் பதுங்க முயன்றபோது பிடிபட்டார்.
கொரோனா வைரஸ் பயத்தை கருத்தில் கொண்டு மங்களூரை சேர்ந்த ஒரு குடியிருப்புக்குள் எந்தவொரு நபருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதனால் அங்கு தங்கி இருந்த மாணவர் ஒருவர் தன்னுடன் தனது நண்பரை தங்க வைக்க ஒரு பெரிய பயண பையில் அடைத்து வைத்து இழுத்து கொண்டு சென்றார்.
இருந்தாலும் அசைந்த அந்த பயண பையை பார்த்து சந்தேகம் அடைந்த குடியிருப்பு நிர்வாகிகள் பயண பையை திறக்கும் படி கூறினர். பயண பையை திறந்த போது அதில் இருந்து மாணவர் வெளியே வந்தார்.
இதை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.