மாவோய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மோதல்கள், பல்வேறு பழிவாங்கல் சம்வங்கள் இடம்பெற்று வருவதுடன் நேற்று செவ்வாய்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மாவோய பகுதியில் தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, மாவோய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த நபரின் மனைவியிடம் குறித்த பகுதியைச் சேர்ந்த நபர்களிருவர் முறைகேடாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளதுடன் இது தொடர்பில் அவர் தனது கணவனான உயிரிழந்த நபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
பின்னர் இது தொடர்பில் அவர் குறித்த நபர்களிடம் வினவிய போதே முரண்பாடு தோற்றம் பெற்றுள்ளது.
இந்த முரண்பாட்டின் காரணமாகவே துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பில் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.