முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நான்கு மணி நேரம் விசேட விசாரணைகளை இன்று நடத்தியது. மன்னார் பகுதியில் வீட்மைப்பு திட்டம் ஒன்றை நடை முறைப்படுத்தும் விதமாக காணி கையகப்படுத்தும் நடவடிக்கைகளின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக நான்காம் மாடி தகவல்கள் தெரிவித்தன.
இன்று முற்பகல் 10.30 மணிக்கு சிஐடியில் ஆஜராகிய முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து 2.10 மணியளவில் வெளியேறியிருந்தார்.
அண்மையில், வெள்ளவத்தை பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவிக்குச் சொந்தமான வீடு ஒன்றிலிருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றறப்பட்டிருந்தன.
அதன் போது சுமார் 250 காணி உறுதிகள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது. அந்தக் காணி உறுதிகளை மையப்படுத்தியே முன்னாள் அமைச்சர் ரிஷாத்திடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் கடந்த 14 ஆம் திகதியும் ரிஷாத் பதியுதீனிடம் விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே, அதன் தொடர்ச்சியாக இன்று மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.