நாட்டை முடக்கியதற்கு எதிராக அமெரிக்காவின் சில பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டங்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மிச்சிகன், வெர்ஜினியா மற்றும் மின்னெசோடா போன்ற அமெரிக்கா மாகாணங்களில் முடக்க நிலையைத் தளர்த்துங்கள் என டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
LIBERATE MINNESOTA!
— Donald J. Trump (@realDonaldTrump) April 17, 2020
கடுமையான பொருளாதார கட்டுப்பாடுகள் குடிமக்களைப் பாதிக்கின்றன என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர், ஆனால் அவற்றை தளர்த்துவது தொற்றுநோயைப் பரப்பக்கூடும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,591 ஆக அதிகரித்ததுள்ளது. இதனையடுத்து இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,000 கடந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 672,200 என ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.
வட கலிஃபோர்னியா, மிச்சிகன், ஓஹியோ, உட்டா, வெர்ஜினியா உள்ளிட்ட நாடுகளில் தொடக்கநிலையைத் திரும்பிப் பெற வேண்டும் என்பதற்காகப் போராட்டங்கள் நடந்தது.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினர் ஆளும் மாகாணங்களிலேயே போராட்டம் நடக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் என திட்டம் வைத்துள்ளது ?
அமெரிக்காவில் மீண்டும் இயல்பு நிலை திரும்ப அந்நாட்டு அரசாங்கம் சில திட்டங்களை வைத்துள்ளது. மூன்று கட்டங்களாக வர்த்தகம் மீண்டும் துவங்கும். சமுக இடைவெளி மற்றும் சில சுகாதார நடவடிக்கைகளுடன் அலுவலகங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்கின்றனர் அந்நாட்டு அதிகாரிகள்.
ஊழியர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களின் உடல்நிலையைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய பரிசோதனை திட்டங்களும் இதில் அடங்கும்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் படையில் பணியாற்றும் அந்தோணி ஃபவ்சி கூறுகையில், முடக்க நிலை மற்றும் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதால் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது என நினைக்க வேண்டாம். மீண்டும் மற்றொரு முறை கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்.
ஏன் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்?
வர்த்தகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதே இந்த போராட்டங்கள் தீவிரமடையக் காரணம் என கூறப்படுகிறது.
”மக்கள் நடமாட தடை விதிக்க இது ஒன்றும் மாகாண ஆளுநர்களுக்கு சொந்தமான இடமல்ல” என போராட்டக்காரர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளார். ஒன்று மக்கள் அனைவரும் தங்கள் அலுவலக பணிகளுக்கு திரும்பிச் செல்லவேண்டும், அல்லது இந்த கொரோனா வைரஸை குணப்படுத்த மருந்து தயாரிக்க வேண்டும் என்கிறார்.
கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் மாகாணங்களின் பொருளாதாரம் “அழியும் நிலைக்குச் சென்றுவிடும்” என போராட்டக் குழுவினர்கள் கூறுகின்றனர்.