இந்த ஒப்பந்தம் மூலம் மொபைல் தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு, இ-காமர்ஸ் இயங்குதளங்களுக்கு முன் நிறுவன மதிப்பாக ₹4.62 ட்ரில்லியனை அளிக்கவிருக்கிறது.
ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு பிரிவான ரிலையன்ஸ் ஜியோ-வின் 9.9% சதவிகித பங்குகளை ₹43,574 கோடிக்கு வாங்கவிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.
ஒரு பில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயனாளிகளைக் கொண்ட இந்தியாவில், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 400 மில்லியனுக்கும் அதிகம். 2016ல் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட், 388 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
சந்தாதாரர்களின் எண்ணிக்கையைவைத்துப் பார்க்கும்போது, இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனமாக ஜியோ வளர்ந்துள்ளது.
ஆக, ஃபேஸ்புக் தனது மிகப்பெரிய சந்தையான இந்தியாவில், மிகப்பெரிய நிறுவனத்தில் முதலீடு செய்யவிருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் மொபைல் தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு, இ-காமர்ஸ் இயங்குதளங்களுக்கு முன் நிறுவன மதிப்பாக ₹4.62 ட்ரில்லியனை அளிக்கவிருக்கிறது.
இந்த ஒப்பந்தம்குறித்து ரிலையன்ஸ் குழுமம் கூறுகையில், “ஃபேஸ்புக் உடனான இந்த ஒப்பந்தம், உலக அளவில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் வாங்கும் சிறுபான்மை பங்கில் மிகப்பெரியதாகஇருக்கும் என்கிறது.
மேலும், ஃபேஸ்புக்கின் இந்த முதலீடு, இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய நேரடி அந்நிய முதலீடாகும்.
இதன்மூலம் வர்த்த சேவையைத் தொடங்கிய மூன்றரை ஆண்டுகளில், இந்தியாவின் சந்தை மூலதனத்தில் டாப் 5 இடங்களுக்குள் வந்திருக்கிறது ஜியோ. 4G VoLTE தொழில்நுட்பத்தோடு இந்தியாவில் உள்ள ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமும் ஜியோ தான். மற்ற அனைத்து நிறுவனங்களும், 2G, 3G, 4G சேவையைத்தான் கொண்டுள்ளன.
ஒப்பந்தம் தொடர்பான செய்திக் குறிப்பில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, “ரிலையன்ஸுக்கும், ஃபேஸ்புக்கிற்கும் இடையேயான இவ்வொப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் டிஜிட்டல் இந்தியா மிஷனின் லட்சிய இலக்குகளான “Easy of Living” மற்றும் ” Easy of doing Business” ஆகியவற்றை அடையவும் அதை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உணரவும் வழிவகுக்கும். கொரோனாவிற்குப் பிந்தைய காலத்தில், இந்தியப் பொருளாதாரம் வெகுசீக்கிரமாக மீண்டெழும் என நான் நம்புகிறேன். அதற்கு, இந்தக் கூட்டு ஒப்பந்தம் நிச்சயம் பங்களிக்கும்” எனக் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக்கின் இந்தியப் பிரிவு துணைத்தலைவரான அஜித் மோகன் கூறுகையில், “இந்த முதலீடு, இந்தியா மீதான எங்கள் அர்ப்பணிப்பையும், ஜியோ நாட்டில் செய்துள்ள வியத்தகு மாற்றங்களின் மீதான எங்கள் வியப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொடங்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குள், ஜியோ 388 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஆன்லைனுக்குக் கொண்டு வந்துள்ளது.
இது, புதுமையான பல நிறுவனங்களை உருவாக்கவும் மக்களை இணைக்க இன்னும் பல புதிய யுக்திகளைக் கண்டுபிடிக்கவும் உதவும். நாங்கள், ஜியோவுடன் இணைந்து இன்னும் அதிக இந்திய மக்களை இணைக்கும் பணியில் ஈடுபடவிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
ஜியோவின் வருகைக்கு முன்பு 1 GB டேட்டா ₹100 -க்கும் அதிகமாக இருந்தது. இப்போதோ அதில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான செலவில் அதே அளவு டேட்டா கிடைக்கிறது.
இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களிடமும் குறைந்த செலவில் இணையத்தைக் கொண்டுசேர்த்த பெருமை ஜியோவையே சேரும்.
..இதன்மூலம் பொழுதுபோக்கு, செய்தி, விளையாட்டு, விளையாட்டுகளின் லைவ் ஸ்ட்ரீமிங் என உலகில் இணையத்தை அதிகம் பயன்படுத்தக்கூடிய மக்களாக இந்தியர்களை மாற்றியிருக்கிறது ஜியோ.