கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் 4 கிலோ மீட்டர் தூரம் காத்துக்கிடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 190 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில், வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு நாடுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் தங்கள் வேலைகளையும், வருமானத்தையும் இழந்துள்ளனர். இதனால் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
People queue for more than two miles to collect food parcels in South Africa pic.twitter.com/PwS6mDqz9o
— The Independent (@Independent) May 1, 2020
தென் ஆப்ரிக்காவிலும் வைரஸ் பரவி வருகிறது. அந்நாட்டில் 5 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு 116 பேர் பலியாகியுள்ளனர்.
வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் தென் ஆப்ரிக்காவில் மார்ச் 27-ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் வருமானம் இழந்து ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டில் சென்சூரியன் பகுதியில் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்துவந்த மக்களுக்கு அரசு தரப்பிலும், சில தனியார் அமைப்புகளும் சேர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்த தகவலை அடுத்து உணவு பொட்டலங்களை வாங்க அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
மக்கள் கூட்டம் அலை போதியதால் அவர்கள் அனைவரும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டனர். 4 கிலோ மீட்டர்களுக்கு (2.5 மைல்) நீண்ட அந்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
இந்த நிகழ்வு வானில் இருந்து டூரோன் கேமரா மூலம் படமாக்கப்பட்டுள்ளது. மக்கள் உணவுக்காக நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

