கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்து, 19 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது.
கோவிட்-19 நோய்த்தொற்றால் 3 லட்சத்து, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உலகில் இறந்துள்ள நிலையில், 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.இந்திய அரசு இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 1 லட்சத்து 1,539 பேர் இந்தியா முழுவதும் கோவிட்- 19 தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று கொரோனா தாக்கத்திற்கு ஆளான 688 நபர்களில், 87 நபர்கள், துபாய், குவைத், மாலத்தீவு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, 688 நபர்களில் 552 நபர்கள் சென்னையில் சிகிச்சை எடுத்துவருகிறார்கள்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை இன்று ஆயிரத்தை தாண்டியது. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் புதிதாக 28 கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1020ஆக பதிவாகியுள்ளது.
இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 442 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 569 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இன்று புதிதாக 37 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,978 ஆக அதிகரித்துள்ளது. 31 பேர்குணமடைந்துவீடுதிரும்பியுள்ளனர்.
சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 451 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,794 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 9,826 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், இது மொத்த எண்ணிக்கையில் 35 விழுக்காடு என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வராவிட்டால் அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியை நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.அந்த அமைப்பு சீனாவைத் தொடர்ந்து பாராட்டி வருவதாகவும், சீனத் தலையீடு எதுவும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதாக காட்டினால் மட்டுமே அந்த நிறுவனத்துடன் தொடர்ந்து இயங்க முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில், கொரோனா பிரச்சனையை டிரம்ப் அரசு சரியாக கையாளவில்லை என்றும், இதை திசைதிருப்பவே உலக சுகாதார அமைப்பு மீது குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் சீன வெளியுறவுத்துறை விமர்சித்துள்ளது.
ஆஸ்திரேலியா தனது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனாவிடமிருந்து மற்றொரு பெரும் அடியை இன்று எதிர்கொண்டது. தங்கள் நாட்டுக்கு ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்யும் பார்லிக்கு 80% வரியை சீனா விதித்துள்ளது.சீனாவின் விருப்பத்திற்கு எதிராக, கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்து உலகளாவிய விசாரணைக்கு ஆஸ்திரேலியா அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு, மக்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயிற்றுவிக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அமெரிக்கவை சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான மார்டெர்னா கூறியுள்ளது.தங்களது பரிசோதனையில் பங்கேற்ற 8 பேரின் உடலிலும் கொரோனா வைரஸை எதிர்த்து போரிடும் ஆன்டிபாடிகள் காணப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸால் ஐரோப்பிய ஒன்றியத்தில் கார் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 71 ஆயிரம் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இதே மாதம் பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையை விட இது 76% குறைவு.
இந்தியாவில் பீகார்,உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 16 தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளனர்.
கொரோனா காரணமாக உலகில் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நியூசிலாந்தில் உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக மக்களுக்கு கூடுதல் விடுமுறைகளை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.நியூசிலாந்து பொருளாதாரம் அதிகளவில் சுற்றுலாவை சார்ந்தே உள்ளது. ஆனால், இப்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததால், இத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், உலகளவில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.இங்கு 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 16,853 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவை கையாளும் விதத்தில் பிரேசிலில் மாற்றுக்கருத்துகள் நிலவுகிறது. மாநில அரசுகள், பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், வைரஸை விட பொது முடக்கம் ஆபத்தானது என அதிபர் சயீர் பொல்சனாரூ கூறியிருந்தார்.