முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கண்டியில் நாளை நடைபெறும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவருக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப்பதவி குறித்து விரிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நடந்து முடிந்த 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் 54,198வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால், பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தற்போது விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.