கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் குறித்த அச்சத்தின் காரணமாக ஸ்பெயினின் கலிசியா பிராந்தியத்தில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கலிசியா பிராந்தியத்தின் வீதிகள், உணவகங்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க இயலாத இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் முதல் முறையாக கலிசியா பிராந்தியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கையை நாட்டின் மற்ற சில பிராந்தியங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன.
வல்லுநர் குழுவினர் அரசுக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதாவது, ஸ்பெயினின் சுகாதார அமைச்சகம் நடத்திய ஆய்வொன்றில், புகைப்பிடிப்பதற்கும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு தொடர்புள்ளதாக தெரியவந்ததை தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் குறித்த அச்சத்தின் காரணமாக ஸ்பெயினின் கலிசியா பிராந்தியத்தில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடித்து அதை வெளியேற்றும்போது நீர்த்துளிகளும் சேர்ந்து பரவுவதால் அதன் மூலம் கோவிட்-19 நோய்த்தொற்று அங்குள்ள மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமின்றி, சிகரெட்டை கையிலெடுத்து வைக்கும்போதும், முகக்கவசத்தை கழற்றி, அணிவதாலும் கூட புகைப்பிடிப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.புகைப்பழக்கத்தின் எதிர்மறையான உடல்நல பாதிப்புகளையும் இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது.
“புகையிலை பயன்பாடு எந்த வடிவத்தில் இருந்தாலும், சுவாச நோய்களின் போக்கை மோசமாக்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்று அந்த ஆய்வு கூறுகிறது.
“தற்போதைய சான்றுகளின்படி, புகைபிடிப்பதற்கும் கடுமையான நோய்த்தொற்று அறிகுறிகள் உருவாவதற்கும் தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது.”