கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ECMO கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்போது, தான் நலமாக இருப்பதாகவும் தொலைபேசியில் யாரும் அழைக்க வேண்டாம் என்றும் காணொளி காட்சி மூலம் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
அதற்குப் பிறகு பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.
அவர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை புதன்கிழமையன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, அவருக்கு ‘ECMO’ கருவியும் பொருத்தப்பட்டிருப்பாதவும் அவருடைய உடல்நலக் குறியீடுகள் தற்போது திருப்திதரும் வகையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் குழு அவரது உடல்நலத்தை கவனித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் அவரது உடல்நலம் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ECMO கருவி என்றால் என்ன?
Extracorporeal membrane oxygenation என்பதன் சுருக்கமே ECMO. ஒருவரது இதயமும் நுரையீரலும் போதுமான அளவு இயங்காதபோது ரத்தஓட்டம் தடைபடுகிறது.
நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் செல்வதும் குறைகிறது. இந்த எந்திரத்தைப் பொருத்துவதன் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு, ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டு மீண்டும் உடலுக்குள் அனுப்பப்படுகிறது.
ரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் உடலின் பிற உறுப்புகள் பாதிக்கப்படுவது இதனால் தடுக்கப்படும்.
பொதுவாக, இதய – நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு இந்த எந்திரத்தைப் பொருத்தி, உடல்நிலையை மேம்படுத்த மருத்துவர்கள் முயற்சிப்பார்கள்.
கோவிட் – 19 நோயின் தாக்கத்தால் போதுமான ஆக்ஸிஜன் ரத்தத்திற்குக் கிடைக்காத நிலையில், அவர்களுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. ஆனால், செயற்கை சுவாசமும் பலனளிக்காத நிலையில், இந்த ECMO கருவி பொருத்தப்படுகிறது.
இதற்கு முன்பாக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ECMO கருவி பொருத்தப்பட்டபோது இந்தக் கருவியின் பயன்பாடு குறித்து பரவலாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நலம் பெற வேண்டுமென ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவரவர் இடத்திலிருந்தபடி எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்களை ஒலிக்கச்செய்வதன் மூலம் இந்தப் பிரார்த்தனையை செய்ய வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.