`என் மகள் ஆன்லைன் கிளாஸ் எரிச்சலாக இருக்குனு சொல்லிட்டிருந்தா. போகப் போக சரியாகிடும்னு சொல்லிக்கிட்டிருந்தோம்’’ என்கிறார் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தை.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த செல்லப்பனேந்தலைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி. ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.
இவரின் மகள் சுபிக்ஷா (15). மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு 10-ம் வகுப்புக்குச் செல்லவிருந்தார்.
மாணவி சுபிக்ஷா தினமும் மதுரைக்கு அரசுப் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார். பள்ளி மற்றும் மாநில, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட வெவ்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு நபர்களிடம் பாராட்டு பெற்றிருக்கிறார்.
இவர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி மதுரை மாவட்ட அளவில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையால் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் சரிவரப் புரியவில்லை என்று பெற்றோரிடம் சொல்லி வந்திருக்கிறார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால், தொடக்கத்திலிருந்தே ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்திருக்கிறார்.
பொதுத்தேர்வில் வெற்றி பெற முடியாமல் போய்விடுமோ, மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற மனக் கவலையில் இருந்த அவர், தன் தாயாரின் சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தை சத்திய மூர்த்தி காவல்துறையினரிடம் கூறுகையில், “தொடர்ந்து என் மக ஆன்லைன் கிளாஸ் எரிச்சலாக இருக்குனு சொல்லிட்டிருந்தா. போகப் போக சரியாகிடும்னு சொன்னோம்.
அதுக்கப்புறம் இயல்பாகத்தான் இருந்தா. என் ஆட்டோக்கு எஃப்.சி எடுத்துட்டு குடும்பத்தோட பிரியாணி சாப்பிட்டோம்.
பிறகு, எல்லாரையும் வீட்டுல விட்டுட்டு நான் திருப்புவனம் போய்டேன். அப்போதான் என் மகள் தற்கொலை செஞ்சுக்க முயன்றதாகச் சொன்னாங்க.
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதே அவள் இறந்துவிட்டதாகச் சொன்னாங்க…” எனக் கூறி கதறியழுதிருக்கிறார்.