மெதிரிகிரிய – பெரக்கும்புர பகுதியைச் சேர்ந்த திருமணமான நபரொருவர் தனது காதலியைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணி புரியும் மெதிரிகிரிய – தியசேன்புர, பிசோ உயன பகுதியைச் சேர்ந்த 26 வயதான திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் சடலம் மெதிரிகிரிய – கடுவுல்ல பகுதியிலுள்ள திராட்சைத் தோட்டமொன்றிலிருந்து இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டதுடன் மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான 1 பிள்ளையின் தந்தையான சந்தேக நபர் தனது வீட்டின் பின்பகுதியிலுள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் உயிரிழந்த நபர் இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக காதல் தொடர்பு இருந்து வந்துள்ளதுடன் இவர்கள் இருவருமே ஏற்கனவே திருமணமானவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தனது காதலியை கொலை செய்தது தொடர்பில் சந்தேக நபர் எழுதிய கடிதம் மற்றும் கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.