நாட்டில் மேலும் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் இதுவரை நாட்டில் 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் இதுவரை வெளியான தகவலின்படி பெலியகொட மீன் சந்தை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 215 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 37 பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 24 பேருக்கும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மினுவங்கொட மற்றும் பெலியகொட கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 3,958 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் தற்போது மேலும் 92 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,521 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 10 வெளிநாட்டவர்கள் உட்பட 3,717 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 27 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளா 70 பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 3,714 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 418 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக 15 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
நாட்டில் இன்றுவரை 432801 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேல் மாகாணத்தின் களுத்துறை, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இதுவரை 56 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இத்துடன் வெல்லம்பிட்டிய மற்றும் குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளுக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.