பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குறித்த பகுதிகள் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தொற்றுக்குள்ளானவர்களில் வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கலந்துகொண்ட மரணச்சடங்கு நிகழ்வில் பங்குகொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேலியகொட மீன் சந்தைக்கு சென்று திரும்பியவர்களில் மூவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு வடமராட்சியில் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதன் பின்னணியில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று 30 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை வடமராட்சியில் முன்னணி மீன் ஏற்றமதி நிறுவனம் ஒன்றில் உள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிக்கும் சீல் வைக்கப்பட்டு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுடன் கூட பழகியவர்களின் விபரங்கள் சுகாதார பிரிவினரால் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை தெல்லிப்பளை பிரதேச செயலக பரிவினர் மற்றும் தெல்லிப்பளை சுகாதார பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் நேற்று மயிலிட்டி மீன்டபிடித் துறைமுகத்தில் 30 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.