கொவிட் 19 தொற்று பரவலின்  2 ஆம் அலையாக கருதப்படும் மினுவாங்கொடை கொரோனா கொத்தணி பரவல் முதல்  இன்று மாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 78 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

இன்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் விஷேட செய்தியாளர் சந்திப்பை நடாத்திய அவர்,  தொற்றுக்குள்ளான 78 பொலிஸாரும் சிகிச்சைகளுக்காக உரிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 300 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

எவ்வாறாயினும்  இதனைவிட சுமார்  2000 பொலிஸார், தமது தங்குமிடங்களில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, சுமார் 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, கரையோர பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதன் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 83 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரையோர பொலிஸ் நிலையத்தின் சேவைகள் துறைமுக பொலிஸார் மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸார் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள்  13 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில்,  7 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொரளை பொலிஸ் நிலையத்தின் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, அங்கு சேவையில் இருந்த பொலிஸாரை பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version