யாழ். தனங்கிளப்பு பகுதியில் பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததுடன், மாணவியின் தாயார் மீதும் தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தனங்கிளப்பு பகுதியில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் அயல் வீட்டில் வசிக்கும் நபர் , வெள்ள நீர் தனது வீட்டு வளவுக்குள் வராத வகையில் அயல் வீட்டு வாசலிலிருந்த மண்ணை வெட்டி தனது வீட்டு வேலிக்கு போட்டுள்ளார்.
அதனை அவதானித்த வீட்டுப்பெண், எதற்காக எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் மண்ணை வெட்டுறீங்க, இப்படி என்றால், எங்கள் வீட்டு வாசலில் வெள்ளம் தேங்கும் , என கூறியுள்ளார்.
இதன்போது குறித்த நபர், கையில் இருந்த மண் வெட்டியால் அப்பெண்ணை தாக்கியுள்ளார். அதனால் அவர் மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.
அதனை அவதானித்த வீட்டிலிருந்த தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் மகளான பாடசாலை மாணவ , ஓடி வந்தபோது , குறித்த நபர் தன்னுடைய சாரத்தை உயர்த்திக் காட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நபரின் குறித்த செயலால் அருவறுப்படைந்த மாணவி அச்சத்தினால் வீட்டினுள் ஓடிச் சென்று கதவைப் பூட்டி விட்டு கூக்குரல் இட்டத்துடன், கிராம சேவையாளர் மற்றும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.
அதேவேளை மாணவியின் கூக்குரலையடுத்து அயலவர்களும் கூடியதை அடுத்து மயக்கமுற்ற பெண்ணை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் தாக்கிய நபரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்நபர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கணவர் இல்லாது தனது மகளுடன் தனித்து வாழும் குடும்ப பெண் மீது தாக்குதல் நடத்தி , மாணவியுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆதரவற்று நிற்கும் அந்த குடும்பம் , அந்நபரினால் தமக்கு மீண்டும் ஏதேனும் ஆபத்து நடந்து விடுமோ எனும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்தி , பாதிக்கப்படட குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்பதுடன், தாக்குதல் நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.