அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது ஆதரவில்லாமல், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது என்று திமுக முன்னாள் தலைவர் மறைந்த மு. கருணாநிதியின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி சமீபத்தில் பேசிய விவகாரம், அரசியல் தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
ஆனால், அவரது கருத்துகளை பெரிதாக கண்டு கொள்ளாதவர்களாக திமுகவினர் காணப்படுகிறார்கள்.
மதுரையில் அழகிரி தனது ஆதரவாளர்களிடம் பேசியபோது, “கருணாநிதி தன்னை ஒரு காலத்தில் கட்சியில் இருந்து நீக்கியிருந்தாலும், தன்னை சேர்த்துக்கொள்ள விருப்பப்பட்டார். திருமங்கலம் இடைத்தேர்தலில் தனது உழைப்பால்தான் திமுக வெற்றி பெற்றது,” என கூறினார்.
அழகிரியின் பேச்சு, அவரது உழைப்பை தற்போது திமுகவில் இருப்பவர்கள் மதிக்கவில்லை என்ற ஆதங்கமும், அவர் தனது பலத்தை காட்டும் நேரம் வந்துவிட்டது என்ற தொனியிலும் அமைந்திருந்ததாக அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.
இதனால் அழகிரியின் பேச்சு பற்றி பல மூத்த திமுக தலைவர்கள் சிலரிடம் பிபிசி பேசியது. திமுக தலைவர் ஸ்டாலின் மாநில முதல்வராக வேண்டுமெனில் தனது ஆதரவு தேவை என அழகிரி கூறியது பற்றி அக்கட்சியின் டி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது, ”அழகிரியின் பேச்சு பற்றி எந்த கருதும் சொல்வதற்கில்லை. அவரின் விமர்சனங்கள் பற்றி கருத்து சொல்வதற்கும் ஒன்றுமில்லை,” என முடித்துக்கொண்டார்.
இதையடுத்து அழகிரியின் ஆதரவு திமுகவுக்கு தேவைப்படும் நிலை உள்ளதா, அழகிரியின் அரசியல் நகர்வு பலன் தருமா என மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்.
அழகிரியின் பேச்சு எந்த விதத்திலும் திமுகவை பலவீனப்படுத்தாது என்றும் அவர் கட்சி தொடங்கினாலும் அவரால் எந்த தாக்கமும் திமுகவிற்கு ஏற்படாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங்.
”ஒரு காலத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அழகிரிக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. தென் மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களாக அவரது ஆதரவாளர்கள் இருந்தார்கள். மூத்த அமைச்சர்கள் கூட அவருக்கு துணையாக இருந்தார்கள். அவருக்கு கவனம் கொடுத்த கருணாநிதி, மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவும் உதவினார். அழகிரிக்கு கருணாநிதி பல வாய்ப்புகளை வழங்கினார்.
ஆனால், தனது ஆதரவாளர்களை அவர் ஒருங்கிணைக்கவில்லை. வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தவும் இல்லை. தற்போது அவர் பேசுவதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தேர்தல் நேரத்தில் பேசப்படும் விமர்சனமாகவே அவரது பேச்சு இருக்கும். அவரது பேச்சை மக்கள் மட்டுமே ரசிப்பார்கள்,” என்கிறார் பகவான் சிங்.
அழகிரி கட்சி தொடங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பற்றி கேட்டபோது, ”அழகிரி திமுக என்ற பெயரில் கட்சி தொடங்குவார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் கட்சி தொடங்கினாலும், திமுகவுக்கு பெரிய சிக்கலாக இருக்காது. ஏனெனில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் ஸ்டாலினிடம் என்றோ சேர்ந்து விட்டார்கள்.
கட்சியில் இருந்து கலைஞரால் விலக்கப்பட்டவர் அழகிரி என்பதால், திமுகவினர் அவருக்கு ஆதரவு தரமாட்டார்கள். ஒருவேளை அவர் கட்சி தொடங்கி, கூட்டணி வைத்தால், அவர் யாருடன் கூட்டணியில் இருக்கிறாரோ, அந்த கட்சிக்கு அவர் பலவீனமாக இருப்பார். அவரை தலைமை பொறுப்பில் வைத்து பார்க்கும் மக்கள் திரள் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்,”என்கிறார் பகவான் சிங்.
மேலும், டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் கூட்டத்திற்கு மக்கள் திரண்டு வருவது என்பதை பெரிய வெற்றியாக யாரும் பார்ப்பதில்லை என்பதால், அழகிரி கூட்டத்தை கூட்டினாலும், அந்த எண்ணிக்கை ஓட்டுகளாக மாறுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் அவர்.
“முந்தைய காலங்களில் அழகிரி சமயோஜிதமாக செயல்பட்டவர். தற்போதுள்ள சூழலில் அழகிரியின் பேச்சு எடுபடுவதற்கு வாய்ப்பு குறைவு,” என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன்.
”மதுரையில் அழகிரி பேசியபோது, அவரது பேச்சில் சுயபச்சாதாபம் வெளிப்பட்டது. ஸ்டாலின் மீது முழுமையான கோபம் தனக்கு இருப்பது போல அழகிரி பேசவில்லை. அதே நேரம், தனக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்று பேசியிருக்கிறார். அவரை நம்பி வந்துள்ள ஆதரவாளர்களிடம் என்ன கருத்தை முன்வைக்க இவற்றை தெரிவித்தார் என்பது தெளிவாகவில்லை.
ஒரு சில நிமிடங்கள் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தோடு காணப்பட்டார்கள். ஆனால் என்ன விளைவை அவர் ஏற்படுத்த முயல்கிறார் என்பதில் தெளிவில்லை,”என்கிறார் லட்சுமணன்.
ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, கட்சியில் பொருளாளர் பதவி போன்றவற்றை பெற்றுக் கொடுத்ததாக அழகிரி பேசினாலும், ஸ்டாலின் தற்போது அடைந்துள்ள வளர்ச்சியை அவரால் தடுக்க முடியவில்லை என்கிறார் பத்திரிகையாளர் லட்சுமணன்.
”சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் தொடங்கியுள்ள நேரத்தில், அழகிரி தொடர்ந்து வைக்கும் கருத்துக்கள் ஒருவித சங்கடத்தை திமுகவுக்கு தரும். தற்போது திமுக தலைவர்கள் அழகிரியின் விமர்சனங்களுக்கு கருத்து தெரிவிக்கவில்லை என சொல்லலாம்.
ஆனால், தேர்தலில் தனது விமர்சனம் பிரதிபலிக்க வேண்டும் என கருத்துகளை அள்ளிவீசும் அழகிரிக்கு ஒரு கட்டத்தில் திமுக தலைவர்கள் பதில் கூறுவார்கள். அது அவர்களின் கட்சி விவகாரமாக முடிந்துவிடும். மொத்தத்தில் அழகிரியால் பெரிய பாதிப்பு திமுகவுக்கு ஏற்பட வாய்ப்புகள் குறைவு,”என்கிறார் லட்சுமணன்.