கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்ப்பாசனக் குளங்களும் வான் பாய்கின்றன.
அந்தவகையில் இரணைமடுக்குளம், கல்மடுகுளம், அக்கராயன்குளம், புதுமுறிப்பு குளம், வன்னேரிக்குளம், கரியாலை நாகபடுவான்குளம், கனகாம்பிகைகுளம், பிரமந்தனாறுகுளம், குடமுருட்டிகுளம் ஆகிய பெரிய நீர்ப்பாசனக்குளங்கள் அனைத்தம் வான் பாய்கின்றன.
இரணைமடுக்குளத்திற்கான நீர்வருகை தொடர்ந்தும் காணப்படுவதனால், குளத்தின் 14 வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
இரண்டு வான் கதவுகள் 2 அடியாகவும், 4 வான் கதவுகள் ஒரு அடி 6 அங்குலமாகவும், 4 வான் கதவுகள் ஒரு அடியாகவும், 4 வான் கதவுகள் 6 அங்குலமாகவும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
தொடர்ச்சியான நீர் வருகை காணப்படுவதனால் திறக்கப்பட்ட வான் கதவுகளின் அளவுகள் அதிகரிக்கப்படலாம் எனவும், கனகராயன் ஆற்று படுக்கிகையின் கீழ் உள்ள மக்கள் குறிப்பாக பன்னங்கண்டி, கண்டாவளை, முரசுமோட்டை, பரந்தன், ஊரியான், உமையாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகளை அண்மித்த மற்றும் நீர் வடிந்தோடும் பகுதிகளில் உள்ள மக்களிற்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தமது வாழ்வாதாரங்களை பாதுகாப்பதுடன், பாதுகாப்பான முறையில் நடந்து கொள்ளுமாறும் நீர்பாசன திணைக்களம் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றது.