வவுனியாவில் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்திருந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற மோதலின்போது அங்கு வந்த மனைவியின் உறவினர் ஒருவரால் கணவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவர் படுகாயமடைந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பிரதேச வாசிகளால் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதுடன், துப்பாக்கியையும் மீட்டிருந்தனர்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த 29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவர் வவுனியா வைத்தியாசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும் ஒரு வாரம் கழித்து இன்றையதினம் அவர் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.