சென்னையைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து பணம், நகைகள் கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில், கடந்த சில நாட்களாக வருவாய் துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்புப்படை அதிகாரிகள் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தியபோது, ஒரு தம்பதியினர் மீது சந்தேகம் எழவே அவர்களை தனியாக அமர வைத்தனர்.
இதனை அடுத்து அவர்கள் கொண்டு வந்த சூட்கேஸ் மற்றும் பையை சோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இந்த சமயத்தில் மனைவி சிறுநீர் கழித்து வருவதாக கூறிவிட்டு கழிவறைக்கு சென்றுவிட்டார். இதனிடையே கணவரிடமிருந்த சூட்கேஸ், மற்றும் பையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அதில், கட்டுக்கட்டாக பணமும், தங்க நகைகளும் இருந்துள்ளன. ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதனை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சென்னையை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது என்பது தெரியவந்துள்ளது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், அங்கிருந்து உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு இதனை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
Rs74 lakh seized from Chennai customs officer at Bengaluru airport
இதனை அடுத்து அவரிடமிருந்த ரூ.74 லட்சம் ரொக்கப் பணம், தங்க நகைகள், 2 லேப்டாப், 2 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவங்கள் நடப்பதற்கு முன்னர் கழிவறைக்கு சென்ற அவருடைய மனைவி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை அழைத்து வர பெண் அதிகாரி ஒருவரை கழிவறைக்கு அனுப்பினர்.
அப்போது ரூ.10 லட்சம் ரொக்கப் பணத்தை அவர் கழிவறையில் வீசியிருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள், அவரையும் கைது செய்தனர்.
பணம், நகைகளை கடத்த முயன்றதாக, சென்னையை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி, அவரது மனைவியுடன் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.