நாட்டில் கொவிட் தொற்றுக் குள்ளானோரின் எண்ணிக்கை 56 000 ஐ கடந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை 346 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 56 422 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 48 617 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 7529 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வியாழனன்று பதிவான மரணங்கள்
நேற்று வியாழக்கிழமை 2 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 276 ஆக உயர்வடைந்துள்ளது.
பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவி;ட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மாற்றப்பட்ட போது அந்த வைத்தியசாலையில் கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். நிமோனியா நிலை மோசமடைந்தமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.
அத்துருகிரியவைச் சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவால் நரம்புத்தொகுதியில் ஏற்பட்ட தொற்றின் மூலம் பல உறுப்புக்கள் செயழிழந்தமையே இவரது மரணத்திற்கான காரணமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.