நாட்டில் கடந்த ஓரிரு தினங்ளில் கொவிட் -19 தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலையில், அபாயமுடைய பகுதிகள் அவதானிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதராத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (25) திங்கட்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்ட 843 தொற்றாளர்களில் 480 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சில பகுதிகள் முடக்கப்பட்ட அதேவேளை , கல்முனையில் முடக்கப்பட்டிருந்த பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் அலையில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் என சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டாம் அலையின் ஆரம்பக் கட்டத்தில் காணப்பட்டதைப் போன்று கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இது அபாய நிலைக்கான அறிகுறி என்று சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணி வரை 383 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 58, 813 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 50,337 பேர் குணமடைந்துள்ளனர்.
8, 193 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 783 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.