கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்ற பின்னர் சுற்றுலா பயணிகளுக்காக விதிக்கப்பட்டிருக்கும் வரையறைகள் இலகுபடுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கொவிட் சுகாதார பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் காரணமாக ஏற்படும் பாதிப்பு தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொரோனா தடுப்பூசி தற்போது நாட்டுக்கு வந்திருக்கின்றது. அதனை தேவையானவர்களுக்கு ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முடிந்ததும் சுற்றுலா துறைக்கு தற்போது விதிக்கப்பட்டிருக்கும் சுகாதார நிபந்தனைகளை இலகுபடுத்த எதிர்பார்க்கின்றோம். சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி சுற்றுலா பயணிகளின் வருகை அத்தியாவசியமானதாகும்.
மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போது விதிக்கப்பட்டிருக்கும் சுகாதார நிபந்தனையை தொடர்ந்து அமுல்படுத்திக்கொண்டு, சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. சுற்றுலா துறையை அடிப்படையாக்கொண்டு நாட்டில் 3மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அதனால் சுற்றுலாதுறை எமது நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமானதொன்றாகும். அதனை பாதுகாப்பதுடன் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.
அத்துடன் எமது நாட்டு சனத்தொகையில் 56 தொடக்கம் 60 வீதமானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி வழங்க முடியும் என சுகாதார பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர். 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது நல்லதில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று 20 வீதமானவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கின்றது. அதனால் ஏனையவர்களுக்கான தடுப்பூசியை அரசாங்கம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்றார்.