குடும்பப் பிரச்சினையின் காரணமாக மாமனாரினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மருமகனின் சகோதரர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபே பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 6.50 மணியளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஹன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
உயிரிழந்த நபர், சந்தேக நபரின் மருமகனின் சகோதரர் என்பதுடன், குடும்பப் பிரச்சினையொன்றின் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 69 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.