இறந்து போன தனது தாயின் உடலை 10 ஆண்டுகளாக தனது வீட்டில் வைத்திருந்த ஒரு பெண்ணை ஜப்பான் நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
48 வயதாகும் யூமி யோஷினோ என்னும் அந்தப் பெண், தலைநகர் டோக்கியோவில் தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில், பத்தாண்டுகளுக்கும் மேலாக அவரது தாயின் உடலை மறைத்து வைத்துள்ளார்.
அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் வசித்து வந்த அந்த குடியிருப்பில் இருந்து யூமி வெளியேற விரும்பாததால் தனது தாயின் உடலை பத்தாண்டுகளாக மறைத்து வைத்திருந்தார் என்று காவல்துறை தகவல்கள் தெரிவிப்பதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உறைந்த நிலையில் இருக்கும் இறந்த உடலில் எந்தவிதமான காயங்களும் தென்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் இறந்த நேரம் மற்றும் இறந்ததற்கான காரணம் ஆகியவற்றை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அவரது வீட்டுக்கு, யூமி யோஷினோ நீண்ட நாட்களாக வாடகை கொடுக்கவில்லை என்பதால் அங்கிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
அதன்பின்பு அந்த வீட்டை தூய்மைப்படுத்தும் போது, அப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் ஒருவரால் யூமியுடைய தாயின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
குளிர்சாதனப் பெட்டிக்குள் அடைத்து வைப்பதற்கு ஏதுவாக இறந்த உடல் வளைத்து வைக்கப்பட்டிருந்தது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
டோக்கியோ அருகே உள்ள சைபா எனும் நகரத்தில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று, (வெள்ளிக்கிழமை) யூமி கைது செய்யப்பட்டார்.