பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கம்பனிகளுக்கு அழுத்தம் பியோகிக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை பெருந்தோட்ட தொழிலாளர்களால் வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள இவ்வேலை நிறுத்த போராட்டத்திற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 725 ரூபாவாகவும் ஏனைய கொடுப்பனவுகளுடன் 1108 ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவதாகவும் குறிப்பிட்டு முதலாளிமார் சம்மேளனம் செவ்வாயன்று அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேசரிக்கு கூறுகையில்,
வேலை நிறுத்தம் அல்லது போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது தொழிற்சங்கங்களின் உரிமை என்பதோடு தமது உரிமைக்காக போராடுவது மக்களின் உரிமையாகும். எனவே இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவோ அல்லது அதனை புற்றகணிப்பதாகவோ நாம் அறிவிக்கப் போவதில்லை. காரணம் 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் என்பது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தற்போதைய அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தின் உள்ளடக்கமாகும்.
எனவே அரசாங்கம் கம்பனிகளையும் கூட்டு ஒப்பந்தத்தையும் காரணம் காட்டிக் கொண்டிருக்காமல் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். எனவே அரசாங்கம் கூறியபடி இந்தாண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டிருக்காவிட்டால் பெருந்தோட்டப்பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்றார்.
பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதனிடம் இந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்து கேட்ட போது, பெருந்தோட்ட மக்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபாவும் போதாது. அவர்களது வாழ்க்கை செலவினடிப்படையில் பார்க்கும் போது அது மிகவும் குறைந்த தொகையாகும். எனவே சனிக்கிழமை அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும்.
கம்பனிகள் முன்வைத்த யோசனைகளுக்கு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இணக்கம் தெரிவித்துள்ளவாறான செய்திகளும் வெளியாகியுள்ளன. இவ்வாறு பெருந்தோட்ட மக்கள் ஏமாற்றப்படக் கூடாது. எனவே தான் எமது தொழிற்சங்கமும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறது என்றார்.