வடக்கு மாகாணத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் நால்வர் அச்சுவேலிச் சந்தையைச் சேர்ந்தவர்கள்.
இருவர் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட தனியார் பஸ் நடத்துநரின் மனைவி, பிள்ளை என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதனால் வடக்கில் மீண்டும் சந்தைக் கொத்தணி ஏற்படக்கூடிய அபாய நிலைமை காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் ஆகியவற்றில் நேற்று 689 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அச்சுவேலி பொதுச் சந்தையில் எழுமாறாகப் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை -கச்சேரி தனியார் பஸ் நடத்துநர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் கண்டறியப்பட்ட நிலையில் நேற்று அவரது மனைவிக்கும், பிள்ளைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் முசலி வாடியில் தொற்று ஏற்பட்டவருடன் நேரடித் தொடர்புடையர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மற்றைய இருவரும் மன்னார் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் கொரோனா அறிகுறிகளுடன் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டவர்கள்.
அத்துடன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அண்மையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புடையவர் என்றார்.