நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, அதிலிருந்து பின்வாங்கும் போது நடந்த போரில் இறந்த பிரெஞ்சு மற்றும் ரஷ்ய படை வீரர்களின் உடல்கள், சுமார் 209 ஆண்டுகளுக்குப் பின், ரஷ்யாவில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.
120 படை வீரர்களோடு, மூன்று பெண்கள் மற்றும் மூன்று பதின் வயது இளைஞர்களும் அடக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களது உடலின் எச்சங்களை, பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நாட்டு அகழாய்வாளர்களை கொண்ட ஒரு குழுவினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தார்கள்.
1812ஆம் ஆண்டு, நெப்போலியனின் படை, மாஸ்கோவிலிருந்து பெருத்த சேதத்துடன் பின்வாங்கியது, அவரது ரஷ்யப் படையெடுப்புக்கு ஒரு முடிவு கட்டியது.
நெப்போலியனின் படைவீரர்கள் அதிவேகமாக முன்னேறி, மாஸ்கோவைக் கைப்பற்றினர். ஆனால், அவர்களால் ஒரு உறுதியான வெற்றியைப் பெற முடியவில்லை. கடுமையான குளிராலும், பசி பட்டினியாலும், ரஷ்ய கொரில்லாக்களின் தாக்குதல்களாலும் அல்லலுற்ற தனது படையினரை பின்வாங்கினார் நெப்போலியன்.
அப்போது உயிரிழந்த படைவீரர்களின் எச்சங்கள் உறைந்த நிலையில், வியாஸ்மா என்கிற நகரத்தில் இருக்கும் மடாலயத்தில் புதைக்கப்பட்டன.
நெப்போலியனின் படை பின்வாங்க தொடங்கியதன் ஆரம்ப காலத்தில் நடந்த வியாஸ்மா சண்டையில் இந்த படைவீரர்கள் இறந்ததாக கருதப்படுகிறது.
தற்போது நெப்போலியனின் படைவீரர்களுடன் அடக்கம் செய்யப்பட்ட மூன்று பெண்கள், படை வீரர்களுக்கு உணவு கொடுத்தும், முதலுதவி செய்தும் உதவியதாக கருதப்படுகிறது. மேலும், பதின் வயது இளைஞர்கள் மேளம் அடிப்பவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.