பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, இவர் தேனீர் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது 10 வயது, 12 வயது மகள்களுக்கு இரவு நேரங்களில் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து போலீஸில் புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மாரிமுத்து அவரது மனைவியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் அவரது மனைவி போலீஸாரிடம் புகார் அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த மாரிமுத்து, தூங்கிக் கொண்டிருந்த தனது மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மகள்கள் இருவரும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், மாரிமுத்துவிடம் இருந்து மகள்களை மீட்டு உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த குழந்தைகள் உதவி அமைப்பினர் (CHILD LINE ) கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி கீழக்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.
இது தொடர்பான ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார்.
அப்போது அவர், “பெற்ற மகள்கள் என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்த மாரிமுத்துவை இயற்கை மரணம் அடையும் வரை சிறையில் அடைக்கவும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்,” என்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட 2 மகள்களுக்கும் தலா 1.5 லட்சம் ரொக்கத்தை மாரிமுத்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.