நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலைமாமணி விருதுகளை வழங்கினார்.
2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தது.
நடிகர், நடிகையர், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுபெறும் கலைஞர்களின் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது பெறுவோர்களின் பட்டியலில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சங்கீதா, மதுமிதா, தேவதர்ஷினி இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இயக்குநர்கள் கவுதம் மேனன், ரவிமரியா, பாடகர்கள் ஜமுனா ரவி, அனந்து, சுஜாதா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இசையமைப்பாளர் டி இமான், தீனா உள்ளிட்டோரும் இவ்விருதை பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, பாடகி பி.சுசீலா மற்றும் நடன கலைஞர் அம்பிகா காமேஷ்வர் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டுக்கான டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி மற்றும் நடன கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர்கள், நடிகைகள், இசைக்கலைஞர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விருதுகளை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.