நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 81,000 ஐ அண்மித்துள்ளது. இதுவரையில் 85 சிகிச்சை நிலையங்களில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த 85 சிகிச்சை நிலையங்களிலும் 12,752 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு தீவிர சிகிச்சை பிரிவில் 26 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 13,714 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 3,66,907 பேருக்கு நேற்றுவரையில் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதேவேளை இன்று புதன்கிழமை மாலை 6 மணி வரை 192 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 80,931 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 76,514 பேர் குணமடைந்துள்ளதோடு, 4,234 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று செவ்வாய்கிழமை மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 453 ஆக உயர்வடைந்துள்ளது.
வத்தளையை சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமை இவரது மரணத்திற்கான காரணமாகும். நுவரெலியாவை சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 20 ஆம் திகதி கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
வலப்பனையை சேர்ந்த 83 வயதுடைய ஆணொருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 21 ஆம் திகதி கொவிட் நிமோனியா மற்றும் இரத்தம் நஞ்சானமையால் உயிரிழந்துள்ளார்.