இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் விடுத்த அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது. இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை. இதனூடாக ஐ.நா. மனித உரிமை சாசனம் மீறப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நேற்றைய அமர்வில் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சல் வெளியிட்டதை அடுத்து பதிலளித்து உரையாற்றும் சந்தர்ப்பத்தில் இலங்கையிலிருந்து இணையவழியில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அந்த உரையில் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையானது, கடந்த ஆண்டு இந்த சபையின் 43வது அமர்வில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்த தீர்மானம் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து வெளிவருகின்றது.
உயர் ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது. இது ஐ.நா. சாசனத்தின் 2 (7) வது பிரிவை முழுமையாக மீறும் செயலாகும். இலங்கைக்கு எதிராக இடைவிடாமல் தொடர்ந்த முன்கூட்டிய, அரசியல்மயப்படுத்தப்பட்ட மற்றும் பாரபட்சமற்ற சில கூறுகளின் நிகழ்ச்சி நிரலைப் பிரதிபலிக்கின்றது. இந்தப் பரிந்துரைகள் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்தவையாகும்.
உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.
ஐ.நா. மற்றும் அதன் பொறிமுறைகளுடன் தொடர்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டு வரும் இலங்கை போன்ற ஒரு நாடு தொடர்பாக, சொத்து முடக்கம், பயணத் தடைகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் பற்றிய குறிப்புக்கள் சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாகக் கவனிக்க வேண்டிய ஒரு தனித்துவமான மற்றும் சிறந்த ஆபத்தை சுட்டிக்காட்டுகின்றது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவல்கள், தவறான கருத்துக்கள் மற்றும் தன்னிச்சையான மதிப்பீடுகள் குறித்து இலங்கை எழுத்துபூர்வ கருத்துக்களை வழங்கியுள்ளது. உயர் ஸ்தானிகர் அலுவலகம் தனது அறிக்கையை முன்னெப்போதும் இல்லாத பிரச்சாரத்துடன் இணைந்து வெளியிட்டமை மற்றும் குறித்த அறிக்கை தொடர்பான எமது கருத்துக்களை ஒரு துணை நிரலாக வெளியிட மறுத்தமை ஆகியன வருத்தமளிக்கின்றது.
இதுபோன்ற செயன்முறைகள் ஐ.நா. வின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் அமைக்கும்.
அரசியல் உந்துதல்களால் உந்தப்பட்டு, இந்த சபையால் இலங்கை மீது செலுத்தப்பட்டுள்ள கவனத்திற்காக நாங்கள் வருந்துகின்றோம். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும்
அரசியலமைப்பிற்கு இணங்க, உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக இந்த ச சபையுடன் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.