தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், சி.பி.எம்., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாமல் பேச்சு வார்த்தை நீடித்து வந்தது. தி.மு.க. தனது தோழமைக் கட்சிகளுக்கு மிகக் குறைந்த இடங்களையே கொடுக்க முன்வந்ததால், இந்த இழுபறி நீடித்தது.
இந்த நிலையில், சனிக்கிழமையன்று மாலையில் ம.தி.மு.கவுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ஆறு இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் என அதன் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.
இதற்குப் பிறகு காங்கிரசுடனான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்துவந்தன. முடிவில், சனிக்கிழமையன்று இரவில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு காங்கிரசிற்கான இடங்கள் இறுதிசெய்யப்பட்டு, பேச்சு வார்த்தை நடைபெற்றது.
விளம்பரம்
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், “இன்று நான், கே.எஸ். அழகிரி, ராமசாமி ஆகியோர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம். இரு கட்சிகளுக்கு இடையிலான ஒப்பந்தம் நாளை காலை கையெழுத்தாகும். மற்ற விவரங்கள் அப்போது அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கீடு; உதயசூரியன் சின்னத்தில் போட்டி
கண்கலங்கிய கே.எஸ்.அழகிரி; ஐபேக் ஆலோசனை? கூட்டணியை உரசிய துரைமுருகனின் பேச்சு
அதன்படி இன்று காலையில் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு காங்கிரஸ் தலைவர்களான கே.எஸ். அழகிரி, தினேஷ் குண்டு ராவ், ராமசாமி உள்ளிட்டவர்கள் வருகை தந்தனர். அங்கே, காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, “இந்தக் கூட்டணி அமைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மதச்சார்பற்ற கூட்டணி உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். பா.ஜ.க. இன்று இந்தியாவின் மிகப் பெரிய நோயாக வளர்ந்துள்ளது.
அந்த நோயை மற்றவர்கள் மீது பரப்பவும் முயற்சிக்கிறார்கள். கொரோனா வைரஸைவிட ஆபத்தான ஒரு ஆயுதமாக அவர்கள் விளங்கி வருகிறார்கள். மற்ற கட்சிகளுக்குள் புகுந்து அதனை உடைப்பது, பலவீனப்படுத்துவது, கட்சி மாற வைப்பது, அரசாங்கத்தை சீர்குலைப்பது என அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
இன்று புதுச்சேரியில்கூட அதைப் பார்த்தோம். இதற்காகவே ஒரு துணை நிலை ஆளுநர் அனுப்பப்பட்டார். அரசாங்கத்தின் அன்றாடப் பணிகளைக்கூட அவர் நிறுத்திவைத்தார். இதற்கெல்லாம் மத்திய அமைச்சரவை துணை இருந்தது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு
ஆகவே, தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் ஆதிக்கத்தை நிலைநாட்டிவிடக்கூடாது. அவர்களுக்கு ஏவல் புரிகிற அ.தி.மு.கவுக்கு ஒரு வாய்ப்பை அளித்துவிடக்கூடாது. சமூக நீதிக்கு எதிராக இருக்கிற இந்த சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும்.
இந்தத் தேர்தல் ஆட்சியைப் பிடிப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல. ஒரு கொள்கையை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டுமென்பதற்கான தேர்தல் என்று கருதி காங்கிரஸ் இதில் ஈடுபட்டிருக்கிறது.
ராகுல் காந்தி தமிழகத்தில் காங்கிரசிற்கு உள்ள இடத்தை மனதில் வைத்து அடிக்கடி இங்கே சுற்றுப் பயணம் செய்கிறார். இந்தத் தேர்தல் என்பது வெறுமனே ஒரு கூட்டணி அல்ல; இந்தத் தேர்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான யுத்தம் என்று கருத வேண்டும். இந்த யுத்தத்தில் நாம் வெற்றிபெற வேண்டும்.
எதிரிகள் இதில் வெற்றிபெற்றால், ஒரு ஆட்சி மாறி இன்னொரு ஆட்சி வருவதாக அர்த்தமல்ல. ஒரு தத்துவம் வீழ்ந்து இன்னொரு தத்துவம் எழுந்ததாக பொருள் படும். எனவே இந்தக் கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று சொன்னார். நாங்கள் அதன்படி இந்தக் கூட்டணியில் கையெழுத்திட்டிருக்கிறோம்.
இந்தக் கூட்டணியில் நாங்கள் 25 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் நாங்கள் கையெழுத்திட்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும், “அரசியலில் ஏற்ற இறக்கங்கள் என்பது இயல்பு. ஒரு கட்சி அதிக இடங்களில் போட்டியிடுவது அல்லது குறைவான தொகுதிகளில் போட்டியிடுவது என்பது அன்றைய கள நிலவரத்தைப் பொறுத்தது.
நாளைய தேர்தலில் நாங்கள் 200 இடங்களில்கூட போட்டியிடலாம். அதற்கான வாய்ப்பு வரும். ஒரு அரசியல் கட்சி போட்டியிடும் இடத்தை வைத்து அதன் தகுதியை முடிவுசெய்யக்கூடாது.
பா.ஜ.கவுக்கு நாங்கள்தான் மாற்றுக்கட்சி” என்று தெரிவித்த கே.எஸ். அழகிரியிடம், தி.மு.கவிடம் மாநிலங்களவை இடம், வாரியத் தலைவர்கள் பதவி ஆகியவற்றைக் கேட்டிருப்பததாகச் சொல்லப்படுவது குறித்து கேட்டபோது, “நாங்கள் கேட்டிருக்கிறோம். பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்றார் கே.எஸ்.அழகிரி.
ஆட்சியில் பங்கு கேட்பீர்களா எனக் கேட்டபோது அப்படி எண்ணம் ஏதும் இல்லையென அழகிரி மறுத்தார்.
“நாடு மிகப் பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. வெறும் சித்தாந்த யுத்தம் மட்டுமல்ல. ஜனநாயகத்தைக் காப்பதற்கான யுத்தம் நடந்து வருகிறது. பா.ஜ.க. இந்த நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக நடத்திவருகிறது.
அரசுகளைக் கவிழ்க்கிறது. ஜனநாயக அமைப்புகளைக் குலைத்து வருகிறது. பண பலத்தைக் கொண்டு எதிர்க்கட்சிகளை நொறுக்கி வருகிறது. தமிழ்நாட்டிலும் அவர்களது திட்டம் இதுதான். அ.தி.மு.க. கூட்டணியில் நுழைந்து, அக்கட்சியை காலிசெய்வதுதான் அவர்கள் நோக்கம். எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்ய வேண்டுமென நினைக்கிறார்கள். ஆகவே நாடு மிக அபாயகரமான நிலையில் இருக்கிறது.
ஆகவே இந்தக் கூட்டணியில் கையெழுத்திட்டுள்ளோம். இந்தக் கூட்டணி தேர்தலில் பெரும் வெற்றிபெறும். இது நாடு முழுவதும் ஒரு வலுவான செய்தியை அனுப்பும். மதச்சார்பின்மை, ஜனநாயகம், நல்லாட்சி ஆகியவை முக்கியம் என்ற செய்தியை இது அனுப்பும்” என்றார் மேலிடப் பொறுப்பாளரான தினேஷ் குண்டு ராவ்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு? – இன்று கையெழுத்தாகிறது ஒப்பந்தம்
கிடைத்த இடங்களில் உங்களுக்கு திருப்தியா எனக் கேட்டபோது, “தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்ட பிறகு, திருப்தியா, இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. இப்போது யுத்த களத்தில் இருக்கிறோம். இந்த அணி தேர்தலில் முழுமையாக வெல்லும். எல்லா தலைவர்களின் ஒப்புதலுடனும் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது” என்றார் தினேஷ் குண்டு ராவ்.
இதுவரை தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. ஆகியவற்றுக்கு தலா ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. 2011ஆம் ஆண்டில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் ஐந்து இடங்களை மட்டுமே பெற முடிந்தது.
2006ஆம் ஆண்டில் 50 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 34 இடங்களைப் பெற்றது. 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இணைந்து 46 இடங்களில் போட்டியிட்டு 30 இடங்களைக் கைப்பற்றின.
2006ஆம் ஆண்டிலிருந்து சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியும் தி.மு.கவும் இணைந்தே போட்டியிட்டு வருகின்றன.
தமிழக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 இடங்களில் தி.மு.க. இதுவரை 48 இடங்களைப் பகிர்ந்தளித்துள்ளது. இன்னும் சி.பி.எம்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி இறுதிசெய்யப்பட வேண்டியுள்ளது.