தி.மு.க 158; அ.தி.மு.க 65; அ.ம.மு.க, ம.நீ.ம-வுக்கு எத்தனை? – `டைம்ஸ் நவ்’ தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை!
தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால் தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரசாரங்கள் என அரசியல் கட்சிகள் அனைத்தும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்த பரபரப்பான சுழலில், மேலும் பரபரப்பைக் கூட்டும் வகையில், டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறது. சி-வோட்டர் ரிசர்ச் நிறுவனத்தோடு இணைந்து டைம்ஸ் நவ் நிறுவனம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது.
அ.தி.மு.க 68… ம.நீ.ம 4… தி.மு.க-வுக்கு எத்தனை..? ஏபிபி கருத்துக் கணிப்பு சொல்வதென்ன?!
ஏற்கெனவே, ஒரு மாதத்துக்கு முன்பாக இதே சி-வோட்டர் நிறுவனத்தோடு இணைந்து ஏபிபி செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியிருந்தது. ஏபிபி கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் போலவே டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பிலும் தி.மு.க கூட்டணியே அமோக வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
தி.மு.க கூட்டணி!
தி.மு.க கூட்டணி 158 இடங்களில் வெற்றிவாகை சூட வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல தி.மு.க கூட்டணி 43.2 சதவிகித வாக்குகளைப் பெறும் எனவும் இந்தக் கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க கூட்டணி!
2021 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணி 65 தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகக் கருத்துக் கணிப்பு முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணி 32.1 சதவிகித வாக்குகளைக் கவரும் எனவும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
அ.ம.மு.க, ம.நீ.ம
வருகிற சட்டமன்றத் தேர்தலில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 5 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பிருப்பதாகவும், அக்கட்சி 7.1 சதவிகித வாக்குகளைக் கவரும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது.
டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க 3 தொகுதிகளில் வெற்றியடைய வாய்ப்பிருப்பதாகவும், 6.5 சதவிகித வாக்குகளைப் பெற வாய்ப்பிருப்பதாகவும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் தமிழர் உள்ளிட்ட இதர கட்சிகள் 11.1 சதவிகித வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
அதிகம் விரும்பப்படும் முதல்வர் வேட்பாளர்!
அதிகம் விரும்பப்படும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது. அதில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக 38.4 சதவிகித மக்கள் வாக்களித்திருப்பதாகவும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு 31 சதவிகித மக்கள் வாக்களித்திருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் முதல்வராக வேண்டுமென 7.1 சதவிகித மக்கள் வாக்களித்திருப்பதாகவும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி, “தி.மு.க இதைவிட அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றே நான் நினைக்கிறேன். மக்கள் இந்த ஆட்சியில் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். டெல்லியே அனைத்து முடிவுகளையும் எடுப்பதால் மக்கள் சோர்வடைந்துவிட்டனர். வரப்போகும் தேர்தலில் தி.மு.க-வுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
அ.தி.மு.க-வின் ரியாக்ஷன் என்ன?
இதுவரை வெளியாகியிருக்கும் இரு பெரும் கருத்துக் கணிப்புகளின் முடிவுகளும் தி.மு.க கூட்டணிக்குச் சாதகமாகவே இருக்கின்றது. இது குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், “இந்த இரண்டு கருத்துக் கணிப்புகளுமே தி.மு.க-வின் ஐபேக் சார்பில் நடத்தப்பட்டிருக்கிறது.
மக்கள் மத்தியில் தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது போல ஒரு மாயையை உருவாக்க தி.மு.க முயற்சி செய்து வருகிறது. ஆனால், மக்கள் இதற்கெல்லாம் மயங்கி ஏமார்ந்துவிட மாட்டார்கள்.
மேலும், அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் இன்னும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவில்லை, அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைகூட இன்னும் வெளியாகவில்லை. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் பலத்தைப் பொறுத்தே வெற்றி வாய்ப்புகள் இருக்கும்.
வேட்பாளர்களே அறிவிக்கப்படாத நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் எப்படி உண்மையானதாக இருக்க முடியும். மக்கள் அ.தி.மு.க-வின் பக்கமே இருக்கிறார்கள். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியே மலரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்கிறார்கள் உறுதியாக.