நவ்பர் மௌலவியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என புலனாய்வு பிரிவினர் உறுதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இப்ராஹிம் சகோதரர்களும் பல அமைப்புகளும் தாக்குதலை மேற்கொள்வதற்காக தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதி வழங்கியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
கட்டாரை தளமாக கொண்ட நவ்பர் மௌவலி ஜஹ்ரான் ஹாசிமை தாக்குதலை மேற்கொள்ளுமாறு தூண்டினார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலிய பிரஜைகளான லுக்மான் தலிப் லுக்மான் தலிப் அஹமட் என்ற இரு சகோதரர்கள் ஜஹ்ரான் ஹாசிம் மாலைதீவை சேர்ந்த நால்வரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
2016 முதல் தாக்குதல் இடம்பெறும்வரை இவர்கள் ஜஹ்ரான் ஹாசிமை அடிக்கடி சந்தித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சேவ் த பேர்ல் என்ற அமைப்பு ஜஹ்ரான் ஹாசிமிற்கு சட்டரீதியான உதவிகளை வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் பிரிவினை வாதிகளில் அந்த ஐவர் யார்?
உயிர்த்த ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பங்களுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ள முஸ்லிம் பிரிவினைவாதிகள் ஐவரையும் அடையாளம் கண்டுக்கொள்வதற்கான விசாரணைகளை துரிதப்படுமாறுமாறு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா, பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு நேற்று (10) பணித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் தேடியறிவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆனைக்குழுவின் அம்பலப்படுத்தப்பட்ட காரணங்கள் அந்த சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் உடனடியாக விசாரணைகளை முடுக்கிவிடுமாறும் சட்டமா அதிபர் பணித்துள்ளார்.
தாலிப், அபு ஹிந்த், அபு அபுதுல்லா என்றழைக்கப்படும் லூக்மான் தாலிப் அஹமட் அல்லது அபு அப்துல்லா, ரிம்ஷன் மற்றும் மகேந்திரன் புலாஸ்தினி அல்லது சாரா ஜாஸ்மின் ஆகியோர் தொடர்பிலேயே விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் 17ஆவது அத்தியாயத்தில் இவர்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.