கமல்ஹாசன் போட்டியிடுவதன் காரணமாக கோவை தெற்கு தொகுதி வி.ஐ.பி தொகுதியாக மாறி உள்ளது. கமல் போட்டியிட போவது மாநில கட்சிகளுடன் அல்ல. தேசிய கட்சிகளுடன் தான்.
கோவை:
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி முத்தமிழுக்கும் புகழ்பெற்ற மதுரையில் மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்தி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.
கட்சி தொடங்கிய ஒரு ஆண்டிலேயே 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. அப்போது நீங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு எனது ஒரே குறி சட்டமன்ற தேர்தல் தான்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறி விட்டு தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார்.
பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகம் முழுவதும் போட்டியிட்டு 3.73 சதவீத வாக்குகளை பெற்று மற்ற அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது.
குறிப்பாக கோவை, ஸ்ரீபெரும்புதூர், பொள்ளாச்சி உள்பட பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளை இந்த கட்சி பெற்றது. பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் கமல்ஹாசன் 2021 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி உடன்பாடு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். மேலும் தான் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்ற ஆலோசனையிலும் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வந்தார்.
இது தொடர்பாக அடிக்கடி கட்சி நிர்வாகிகளை அழைத்து நமக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி எது, நான் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தார்.
கமல்ஹாசன் முதலில் சென்னை ஆலந்தூர் அல்லது கோவை தெற்கு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் அல்லது இரண்டிலுமே போட்டியிடலாம் என கூறப்பட்டது.
மேலும் அவரது சொந்த ஊரான பரமக்குடியில் கூட போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். எனவே கமல் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மட்டுமல்லாமல் மற்ற கட்சியினருக்கும் ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது. தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்ற அறிவிப்பை துணைத்தலைவர் மகேந்திரன் மகிழ்ச்சி பொங்க வெளியிட்டார்.
இந்த செய்தியை கேட்டதும் கோவை தெற்கு தொகுதியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், கோவை மாவட்ட தொண்டர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சென்னையில் ஏதாவது ஒரு தொகுதிகளில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் கோவையில் போட்டியிட சில முக்கிய காரணங்களும் சொல்லப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் 1 லட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார்.
இதில் அடங்கியுள்ள 6 தொகுதிகளிலேயே கோவை தெற்கு தான் மிக சிறிய தொகுதி. இந்த தொகுதியில் மொத்தமாக 2,52,389 வாக்காளர்கள் உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 64,453 வாக்குகளும், பாரதிய ஜனதா 46,368 வாக்குகளும் பெற்றன. அதேசமயம் முதல் முறையாக போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் 23,838 வாக்குகளை பெற்றது.
இவ்வளவு ஓட்டுகள் கிடைத்ததே பெரிய வெற்றியாக பார்க்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியினர். இதுதவிர இந்த தொகுதியில் கமல் கட்சிக்கு என்று மக்கள் மத்தியில் கணிசமான ஆதரவும் உள்ளது. நடுநிலை வாக்காளர்களின் ஆதரவும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவும் ஒரு காரணம் ஆகும்.
இதுதவிர இந்த தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள படித்த வாக்காளர்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர், வெளிமாநில மக்களின் வாக்குகளை தனது நட்சத்திர அந்தஸ்து மூலம் அள்ளி விட முடியும் என்பதே கமல் கட்சியின் கணக்காக உள்ளது.
அதற்கேற்றவாறே கடந்த சில மாதங்களாகவே மக்கள் நீதிமய்யம் கட்சியினர் கோவை தெற்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.
முதல் முறையாக தேர்தல் களத்துக்கு வந்துள்ள கமல்ஹாசன் முதல் முயற்சியிலேயே வெற்றிக் கொடியை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்துக்கு இருக்கும் சாதகமான அம்சங்கள், பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு இருக்கும் பலவீனங்கள் போன்றவை குறித்து தீவிரமாக கலந்தாலோசித்த பிறகே இந்த தொகுதியை தேர்வு செய்திருப்பதாக அக்கட்சியினர் கூறுகிறார்கள்.
கமல்ஹாசன் போட்டியிடுவதன் காரணமாக இந்த தொகுதி வி.ஐ.பி தொகுதியாக மாறி உள்ளது. கமல் போட்டியிட போவது மாநில கட்சிகளுடன் அல்ல. தேசிய கட்சிகளுடன் தான்.
இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதாவும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும் களம் இறங்கியுள்ளன.
இந்த 2 கட்சிகளுடன் தான் கமல் இந்த தேர்தலில் மல்லுக்கட்ட போகிறார். முதல் முறையாக தேர்தல் களத்தில் குதித்துள்ள கமல்ஹாசனுக்கு, இந்த இருகட்சி வேட்பாளர்களின் சவாலையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது.
அவர்களையெல்லாம் சமாளித்து இந்த தொகுதியில், தேர்தலில் கமல்ஹாசன் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.