களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை மரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
தேற்றாத்தீவு பாலமுருகன் வீதியைச் சேர்ந்த முன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான உதயராஜ் ஹம்சவர்த்தினி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் வழமை போல் நேற்று (16) விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, தனது விளையாட்டுப் பொருள் கிணற்றில் விழ்ந்ததைக் கண்டு அதனை எடுக்க முற்பட்டபோது தவறுதலாக கிணற்றில் விழ்ந்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தையை கிணற்றிலிருந்து மீட்ட தந்தை, களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் குழந்தையை அனுமதித்து சிகிச்சையழிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் க.ஜீவராணி உத்தரவுக்கமைவாக களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டதுடன், விசாரனைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, உடற் கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.