ilakkiyainfo

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

 

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே திருமணம் என்ற பந்தம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், எந்தக் காரணத்துக்காக இந்த உறவுமுறை உருவாக்கப்பட்டதோ, அது இன்னமும் முழுமை அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், பெண் என்பவள் ஆணுக்கு அடிமைபோலவும், ஆணுக்குப் பெண் அடங்கி நடக்க வேண்டும் என்பதையே வேதவாக்காகவும் சொல்லிவைத்தார்கள்.

அதனால்தான், ‘கல்லானாலும் கணவன்’, ‘புல்லானாலும் புருசன்’, ‘சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை’ போன்ற பெண்ணடிமைக் கருத்துகளை அழுத்தம் திருத்தமாகப் பரப்பிவைத்தார்கள்.

அதுமட்டுமின்றி, கணவன் இறந்த பிறகு, அவனது சிதையில் உயிருடன் பெண்ணைத் தள்ளி எரிக்கப்படும் பெரும் அநீதிகளும் அந்தக் காலத்தில் இழைக்கப்பட்டன.

அத்துடன் பலதார மணம், ஆணுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டதாக இருந்தது. விதவைப் பெண்களுக்கு திருமணம் தடை செய்யப்பட்டிருந்தது.

வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறையில் அடைபட்டுக் கிடப்பதற்கு மட்டுமே பெண் என்ற நிலை இருந்தது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், சம்பளம் வாங்காத ஒரு வேலைக்கார அடிமையாகவே பெண்ணின் நிலை கடந்த நூற்றாண்டு வரை இருந்தது.

ஆனால், இன்று நிலை மாறிவிட்டது. ஆம், இன்று ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று சமமாக எல்லாத் துறைகளிலும் சிறப்பாகப் பெண்களால் ஈடுபடமுடிகிறது.

தற்போதும் திருமணத்தின் குறைகள் முழுமையாகக் களையப்பட்டதாகச் சொல்லமுடியாது என்றாலும், ஓரளவு ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது.

‘திருமணம் என்ற இந்த உறவு மனிதர்களுக்கு இடையே அவசியம்தானா?’ எதற்காக இந்த ஒப்பந்தம்? உடலுறவுகொள்வதற்குச் சட்டமும் சமூகமும் வழங்கும் லைசன்ஸ் என்று இதை எடுத்துக்கொள்ளலாமா?

காமம் மட்டுமே காரணம் என்றால், அதற்கு இப்படி ஓர் ஒப்பந்தம் எதற்கு? வேறு எந்த உயிரினத்திலும் இல்லாத திருமணம் என்ற உறவு மனிதர்களுக்கு மட்டும் தேவையா? என்று பல கேள்விகள் எழலாம்.

காமம் என்பது ஆண்பெண் உறவில் ஓர் அங்கம் என்றாலும், மணவாழ்வை, அதற்கான உரிமம் என்று சொல்வதை ஏற்க இயலாது.

அன்பும் பிரியமும் அதன்வழியே உருவாகும் நட்பும் காதலாகி, ஒருவருக்கொருவர் துணையாகி வாழ ஓர் அமைப்பை ஏற்படுத்தித் தருகிறது திருமணம்.

இது ஒரு வணிக ஒப்பந்தம் போன்று ஒட்டுதல் இன்றி இருக்க முடியாது. மகிழ்ச்சியான உறவும், சந்தோஷமான வாரிசுகளும் திருமண ஒப்பந்தத்தை உயிருள்ளதாக மாற்றுகின்றனர்.

தம்பதியர் அன்பு கலந்து வளர்த்தெடுக்கும் குழந்தைகளின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தேவையான சூழலையும் உருவாக்கித் தருவதும் மணவாழ்வின் இன்றியமையாத பங்காகிறது.

நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகமாகத் தேவையான கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதோடு, காலத்தில் நட்பும் அன்பும் கலந்த நல்லதொரு உறவாகப் பரிமளிக்கிறது.

ஆனாலும் எல்லாத் திருமணங்களும் நல்லதொரு சூழலை ஏற்படுத்தித் தருகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். திருமணம் தோல்வி அடைவதற்கு மண வாழ்வில் ஈடுபடுவோரின் நிறைகுறைகள், அவர்களின் சூழல் போன்றவை காரணமாக இருக்கிறதே தவிர, திருமணம் என்ற உறவை குறைசொல்வது சரியாகாது.

கடந்த நூற்றாண்டு வரையிலும், ஆணோ பெண்ணோ தன் இணை என்ன தவறு செய்தாலும் பொறுத்துப்போக வேண்டும் என்று (திருமணத்தின் புனிதத்தைக் காக்க, தாலியின் புனிதத்தைக் காக்க) வாழ்நாள் முழுவதும் நிம்மதியின்றியே மணவாழ்வில் சிறைப்பட்டிருந்தார்கள்.

இது ஒருவகைத் தவறு என்றால், இப்போது அதன் மறு எல்லையில் மக்கள் நிற்கிறார்கள். ஆம், அடுத்தவர்களைப் புரிந்துகொள்ள நினைக்காமலும், பொறுமையைக் கடைப்பிடிக்காமலும் நினைத்தவுடன் தம் விவாகத்தை முறித்துக்கொள்ளும் அமைதியற்ற நிலையில் இருக்கிறார்கள்.

இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையே சமன்பட்ட நிலை ஒன்று இருக்கும். அதுதான் வெற்றிகரமான திருமண நிலையாகும்.

வீட்டில் பெற்றோர்களால் நன்கு பார்த்து, ஆய்ந்து நிச்சயிக்கப்படுகிற திருமணங்களாக இருந்தாலும் சரி, தாமே சந்தித்து, காதலித்துக் கைப்பிடித்த திருமணங்களாக இருந்தாலும் சரி, மண வாழ்வில் பல சவால்களைச் சந்திக்க நேர்வது இயற்கை.

இந்தச் சவால்கள் வெளிச்சூழலால், சூழ்ந்திருக்கும் உறவு போன்றவற்றாலும் ஏற்படலாம் அல்லது உள்காரணங்களால் அவரவரின் கொள்கை, சிந்தனை காரணமாகவும் இருக்கலாம்.

இவை இல்லாத நல்லியல் திருமணங்கள் (Ideal Marriages) இருக்காது என்று சொல்ல முடியாவிட்டாலும், மிகவும் அபூர்வம் என்று கூறலாம்.

மணவாழ்வின் முக்கியம் கருதி இந்தப் பிரச்னைகளைச் சமாளித்துப் பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

அதே சமயம், மணவாழ்க்கை என்பது உச்சாணிக் கொம்பில் தூக்கிவைக்க வேண்டிய ஒரு புனித நிலை அல்ல.

அதனால், தீராத பிரச்னைகளும் உடல் அல்லது உயிருக்குத் தீங்கு நேரும் வன்முறைகளும் திருமண பந்தத்தில் இருக்குமானால் அதைத் தூக்கி எறியவேண்டியது அவசியம்.

எந்தவித வன்முறையும் இல்லாதவரையில், ஒருவருக்கொருவர் புரிந்துணர்வும் அவரவர் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும், நல்ல நட்பின் அடிப்படையில் நீண்ட காலத் துணையாக வாழ்வதற்கான அற்புத வாய்ப்பாக மணவாழ்வைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அப்போது இந்த ஆயிரங்காலத்துப் பயிர் பல்லாயிரங்காலத்துப் பயிராகச் செழித்து நிற்கும். முன்பு பெண் என்பவள் பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரம் போன்று கருதப்பட்டதால், ஆணுக்கு காம இச்சை ஏற்படும்போது மட்டும் அவளைக் கூடுவதும், காமம் தணிந்த பின்னர் அவளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருப்பதும் மிக சாதாரண நடைமுறையாக இருந்தது.

இன்னும் சொல்லப்போனால் ஆணின் காம வடிகாலாகவே பெண் இருந்தாள். அதனால் உறவு என்பது சுகம் அனுபவிப்பது என்ற சிந்தனை இல்லாமல், உடலுறவு என்பதே பிள்ளை பெறுவதற்காகவே என்ற நிலை இருந்தது.

பெண் தானே முன்வந்து உறவுக்கு அழைப்பது ஆபாசமாக, மரியாதைக் குறைவாகக் கருதப்பட்டது. எந்தப் பெண்ணாவது உறவுக்கு அழைத்தால், அவளைத் தவறான பெண்ணாக கொச்சைபடுத்தினார்கள் என்பதால், பெண் தன்னுடைய ஆசைகளை எல்லாம் தனக்குள்ளே பூட்டிவைத்துக் கொண்டாள்.

இன்னும் சொல்லப்போனால், உடலுறவில் உச்சகட்டம் அடைவது என்ற நிகழ்வையே கோடானுகோடி பெண்கள் அறியாமலே இருந்தார்கள்.

ஆணும் பெண்ணும் சமம் என்று பெண்கள் பொருளாதார சுதந்தரம் அடைந்த பின்னரே, தன்னுடைய உடலில் இருக்கும் சுகத்தைப் பெண் அறியத் தொடங்கியிருக்கிறாள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

விரும்பியதை எல்லாம் வாங்கத் தொடங்கிய பெண்ணால், இப்போது உடலுறவில் இன்பத்தையும் கேட்டு வாங்க முடிந்திருக்கிறது. உறவில் ஆண் திருப்தி அடைவதுபோன்றே, பெண்ணாலும் திருப்தி அடைய முடியும் என்பது பெண்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.

இந்த விழிப்புணர்வை முழுமையாக அறிந்துகொள்வதில்தான் ஆண்-பெண் இணையின் வெற்றிச் சூத்திரம் இருக்கிறது. திருமண வாழ்க்கை வெற்றி அடைவதும், தோல்வி அடைவதும்கூட இதில் ஓர் அம்சம்தான்.

இன்று கோர்ட்டுக்கு வரும் விவாகரத்து வழக்குகளில், ‘ஆண்களால், என்னைத் திருப்தி செய்ய முடியவில்லை’ என்று பெண்கள் புகார் செய்வது அதிகரித்துவருகிறது.

இதற்கு உடல்நலக் குறைபாடு, மனநலக் குறைபாடு போன்றவைதான் காரணம் என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும், உண்மை என்னவென்றால், பெண்மையைப் புரிந்துகொள்ளாமைதான்.

சமையல் அறையில், ஹாலில் ஒரு பெண்ணை அதட்டுவதுபோன்று, அடிமையாக வேலை வாங்குவதைப்போன்றே, படுக்கை அறையிலும் அவளிடம் இருந்து இன்பம் மட்டும் பெற நினைக்கிறார்கள் ஆண்கள்.

பொருளாதாரத் தடை இருந்த காலகட்டத்தில் பெண்கள் இதைக் கண்டும் காணாமல், எதையும் எதிர்த்து செய்ய முடியாமல் இருந்தார்கள்.

ஆனால், இன்று ஆணுக்குச் சமமாக சம்பாதிக்கும் நிலையில், படுக்கை அறை அடிமையாக இருக்க பெண்கள் விரும்பவில்லை.

‘படுக்கை அறையில் பெண்ணை மகாராணியாக நடத்தினால், மற்ற அறைகளில் அவள் அடிமையாக இருப்பாள்’ என்று ஒரு முதுமொழி உண்டு.

பெண்ணுக்கு என்னவெல்லாம் தேவை என்பதைத் தெரிந்து அதைப் படுக்கை அறையில் ஆண் கொடுத்தால், மற்ற அறைகளில் அவனுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்.

படுக்கை அறையில் ஓர் ஆணால் மிக எளிதாக உச்சகட்டத்தை அடைந்துவிட இயலும். ஆனால், ஒரு பெண்ணை உச்சகட்டத்துக்கு அழைத்துச்செல்வது ஒரு கலை.

இந்தக் கலையில் கரை கண்டதுதான் நம் நாடு. இந்த உலகிலேயே காம அனுபவத்துக்கு என்று தனியே புத்தகம் எழுதிப் பரப்பியவர்களும் நம் இந்தியர்களே.

‘காமத்தை அனுபவிக்கத் தயங்கத் தேவையில்லை’ என்று உடலுறவுச் சிற்பங்களைக் கோயில் கோபுரங்களில் வடித்துவைத்ததும் நம் முன்னோர்களே.

ஆண்-பெண் இருவரும் காமக்கலையில் இன்பத்தின் எல்லைவரை செல்ல வேண்டும் என்பதற்காக, நம் முன்னோர்கள் எழுதிவைத்திருக்கும், ‘காமசூத்திரம்’ மற்றும் ‘கொக்கோகம்’ போன்ற நூல்களில் இருந்து முக்கியமான சில கருத்துகளை மட்டும் அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

உடலுறவில் உச்சம்!! – (பகுதி-2)

பெண்ணுங்க அந்த விஷயத்திற்கு ரெடின்னு எப்படி தெரிஞ்சுக்கலாம்

Exit mobile version