ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்திலுள்ள செனாப் ஆற்றுக்கு மேலாக நிர்மாணிக்கும் புகையிரத பாலம், உலகிலேயே மிக உயரமான பாலமாகக் கருதப்படுகின்றது.
இந்தியாவின் புகையிரத திணைக்களத்தால் நிர்மாணிக்கப்படும் இப் பாலமானது காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு நேரடி இணைப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. வரலாற்றில் பேசப்படும் நிகழ்வாக அமைந்துள்ள அந்தப் பாலத்தின் வளைவுப் பகுதி நிறைவடைந்துள்ளது.
“மேற்புற நிர்மாணப்பணிகளும் விரைவில், நிறைவடையும்” என மத்திய புகையிரதத் திணைக்கள அமைச்சர் பியூஷ் கோயல்( Piyush Goyal ) தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இது குறித்த வீடியோ பதிவொன்றை பகிர்ந்துள்ள அமைச்சர் “இது உலகின் மிக உயர்ந்த புகையிரதப் பாலமாக மாறும் ”எனத் தெரிவித்திருந்தார். ஆற்றுக்கு மேலே சுமார் 359 மீற்றர் உயரத்தில் இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் உயிர் ஆபத்து உள்ளிட்ட பல சவால்களுக்கு மத்தியில் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
இத்திட்டம், ஒரு தேசிய திட்டமாக 2002 இல் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.