கம்பளை – அங்குருமுல்ல பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவனொருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்குருமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை தீக்கிரையாகி உயிரிழந்த நிலையில் இரு சடலங்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
அங்குருமுல்ல – வத்தஹேன பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரும், 68 வயதுடைய அவரது கணவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தம்பதியினரான இவர்கள் நீண்ட நாட்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் , இவர்களுக்கு எதிராக கம்பளை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையொன்றும் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே குறித்த நபர் அவரது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து பின்னர் சடலத்தினை தீயிட்டு எதிர்துள்ளதுடன் , தானும் அதே தீயில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.