விழுப்புரம் அருகே கள்ளக்காதலைக் கண்டித்த கணவனை, கள்ளக்காதலனோடு சேர்ந்து கழுத்தறுத்துக் கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்துள்ளார் மனைவி, ஒரு மாதம் கழித்து கொலை அம்பலமானது எப்படி? கள்ளக்காதல் ஜோடி எங்கே?
இளைஞர் ராதாகிருஷ்ணன், தனது பக்கத்து வீட்டில் வசித்த திருமணமான இளம்பெண் சுஜித்ரா மேரியுடன் வைத்த கள்ளக்காதல் அவரது கணவரைக் கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 33 வயதான லியோபால். வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி 24 வயதான சுஜித்ரா மேரி.
இவர்களுக்கு 5 வயது மற்றும் 3 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். லியோபாலின் தந்தை சகாயராஜ், மூத்த மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். பிப்ரவரி 8ஆம் தேதி சகாயராஜ் மகனின் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
போனில் பேசிய மருமகள் சுஜித்ராமேரி, பிப் 4ஆம் தேதி புதுச்சேரியில் நடந்த நண்பரின் திருமணத்திற்கு சென்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும் சிலமுறை சகாயராஜ் செல்போனில் பேசியபோது லியோபால் வெளியூர் சென்றிருப்பதாக சாக்கு போக்குகள் சொல்லி வந்தார்.
சந்தேகமடைந்த சகாயராஜ் 2 முறை சென்னையில் இருந்து பனையபுரம் கிராமத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, சவாரிக்காக திருப்பதி சென்று விட்டதாக அப்போதும் சுஜி்த்ரா மேரி ஏதோ சொல்லி தட்டிக் கழித்துள்ளார்.
இதையடுத்து பிப்ரவரி 21ம் தேதி மீண்டும் மகன் வீட்டிற்கு வருவதாக சகாயராஜ் தகவல் தெரிவித்து விட்டு வந்தபோது சுஜித்ரா மேரியைக் காணவில்லை. குழந்தைகள் இரண்டும் வீட்டின் பின்புறம் உள்ள காலியிடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில், பிப்ரவரி 23ம் தேதி சகாயராஜ் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வியாழக்கிழமை காலையில், வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம், ஓரிடத்தில் குழிதோண்டப்பட்ட அடையாளம் இருந்தது.
சந்தேகத்தின் பேரில் அதைத் தோண்டிப் பார்த்தபோது, லியோபாலின் சடலம் அங்கு புதைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சடலத்தை தோண்டி வெளியே எடுத்தனர். லியோபாலின் கழுத்து அறுக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் இருந்தன.
போலீசாரி்ன் முதற்கட்ட விசாரணையில் சுஜித்ரா மேரியுடன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 20 வயது கல்லூரி மாணவர் ராதாகிருஷ்ணனையும் காணவில்லை என்பது தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், செல்போன் சிக்னல்கள் அடிப்படையில், கேரளாவில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ராதாகிருஷ்ணனும், சுஜித்ரா மேரியும் சிக்கினர்.
கள்ளக்காதல் ஜோடியை போலீசார் விக்கிரவாண்டி காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. லியோபால் அடிக்கடி சென்னைக்கு சென்று விடுவதால், ராதாகிருஷ்ணனுக்கும், சுஜித்ரா மேரிக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு, லியோபால், அவரது நண்பர், மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேர் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட சண்டையில் லியோபாலும், ராதாகிருஷ்ணனும் சேர்ந்து நண்பரை அடித்துக் கொலை செய்து லியோபாலின் வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்துள்ளனர்.
இந்த விவகாரம் யாருக்கும் தெரியாத நிலையில், லியோபாலுக்கு தனது மனைவியின் கள்ளக்காதல் பற்றி தெரியவந்ததால் இருவரையும் கண்டித்துள்ளார். லியோபாலை கொலை செய்துவிட கள்ளக்காதல் ஜோடி தீர்மானித்துள்ளது. நண்பரை கொலை செய்து புதைத்த பாணியில் கொலை செய்ய ராதாகிருஷ்ணன் திட்டம் தீட்டினார்.
அதன்படி பிப்ரவரி 3ம் தேதி இரவு மதுபோதையில் லியோபால் வீட்டிற்கு வந்தபோது இருவரும் இரும்புக் கம்பியால் அவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டின் பின்பக்கம் குழிதோண்டிப் புதைத்து விட்டு ஒன்றும் தெரியாத மாதிரி நடித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரையும் கைது செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட நண்பர் யார்? அவரது சடலம் எங்கு புதைக்கப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண் கேரளாவில் சிக்கிய நிலையில் மேலும் ஒரு கொலைச் சம்பவம் அம்பலமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.