பொகவந்தலாவ நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டிகளில் பொருத்தப்பட்டிருந்த மின்கலங்கள் (Battery) களவாடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை பலாங்கொடை வீதியில் பொகவந்தலாவை தபாலகத்திற்கு அருகில் நேற்றிரவு (25) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு பஸ் வண்டிகளிலேயே இவ்வாறு மின்கலங்கள் திருடப்பட்டுள்ளன.
இன்று ( 26 ) காலை பஸ் வண்டியை எடுக்க சென்ற சாரதிகள் எஞ்சினை இயங்கச் செய்கையில் அது இயங்காத நிலையில் மின்கலம் பெட்டியை திறந்து பார்க்கையிலேயே நான்கு பஸ்களிலும் உள்ள எட்டு மின்கலங்கள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஹட்டன் பொகவந்தலாவை வீதியில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளிலேயே இவ்வாறு மின்கலங்கள் திருடப்பட்டுள்ளதுடன் குறித்த பஸ் சாரதிகளினால் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து நகரில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரிவி காணொளி உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
மின்கலம் ஒன்றின் விலை சுமார் 40 ஆயிரமாகும். இந் நிலையில் இவ்வாறு மின்கலம் களவாடப்பட்டுள்ளமையினால் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியதுடன் சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பஸ் உரிமையாளர்களும் சாரதிகளும் தெரிவிக்கின்றனர்