இந்த ஆண்டுக்கான தாதா சாஹிப் பால்கே விருது நடிகர் ரஜினி காந்துக்கு வழங்கப்படுவதாக இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
சினிமா துறையில் சாதனை படைக்கிறவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இது. இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்ற தமிழ் நடிகர் சிவாஜி கணேசன்.
விருதுக்கு ரஜினி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து டிவிட்டரில் தகவல் தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான ரஜினிக்கு இந்த விருதினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக அவரது பங்களிப்பு குறித்து புகழ்ந்து பேசியுள்ள ஜவடேகர், ஆஷா போஸ்லே உள்ளிட்ட நடுவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ரஜினி – சில சுவாரஸ்ய தகவல்கள்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் ஆவார்.
திரைப்பட வாய்ப்புகளுக்காக தனது 26-ஆவது வயதில் ரஜினிகாந்த் சென்னை வந்தார். திரைத்துறையில் நுழைவதற்கு முன், கன்னடத்தில் பல்வேறு நாடக நிகழ்ச்சிகளில் ரஜினி நடித்துள்ளார்.
போதிய பண வசதி இல்லாததால் நடிப்பு பயில முடியாமல் இருந்த ரஜினியை, மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் சேர்த்து உதவி செய்தவர் அவரது நெருங்கிய நண்பர் பஹதூர்.
நாடக நிகழ்ச்சி ஒன்றில் முதல்முறையாக ரஜினியை பார்த்த இயக்குனர் கே.பாலச்சந்தர் “அபூர்வ ராகங்கள்”(1975) படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார்.
அபூர்வ ராகங்கள் படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சிவாஜி கணேசனை போல நடித்து காண்பித்தார். அதனை பார்த்த கே.பாலச்சந்தர் ரஜினியை தமிழ் கற்றுக் கொள்ளும்படி கூறினார்.
கே.பாலச்சந்தர்தான் தன்னுடைய வழிகாட்டி என அடிக்கடி கூறுவார் ரஜினி. எனினும், அவரது பாணி மற்றும் சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்தது இயக்குனர் எஸ்.பி. முத்துராமன். எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் 25 படங்களில் நடித்துள்ளார் ரஜினி. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஏழு படங்கள் ரஜினி நடித்துள்ளார்.
“ரஜினி வைரம் என்றால், நானும் கே.பியும் அவனை மிளிரச் செய்தோம். கே.பி வைரத்தை கண்டுபிடித்தார். நான் அதனை மெருகேற்றினேன்”, என்று கூறியிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.
அபூர்வ ராகங்கள் வெளியான அடுத்த ஆண்டே, கன்னடத்தில் ‘கத சங்கமா’ என்ற படத்தில் நடித்தார் ரஜினி.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் ரஜினி நடித்துள்ளார்.
ரஜினி ஆங்கில மொழியில் நடித்த முதல் மற்றும் ஒரே படம் “ப்ளட்ஸ்டோன்” 1988ஆம் ஆண்டு வெளியானது.
முதன் முதலில் முழு கதாநாயகனாக ரஜினிகாந்த் அறிமுகமாகிய திரைப்படம் பாஸ்கர் இயக்கிய “பைரவி”(1978).
“ஆறிலிருந்து அறுபது வரை”(1979), “ஜானி”(1980) போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்திய திரைப்படங்கள் என அப்போது கருதப்பட்டது.
நடிகைகள் ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீதேவியுடன் இணைந்து அதிக படங்கள் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.
கே.பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனம் முதன் முதலாக தயாரித்து, எஸ்.பி. முத்துராமன் இயக்கிய “நெற்றிக்கண்”(1981) திரைப்படம், ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மோதி, எடப்பாடி, ஸ்டாலின், கமல் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன் இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது.
திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருது, இந்திய சினிமாவின் தந்தை என்று கருதப்படும் தண்டிராஜ் கோவிந்த பால்கேவின் பெயரில் வழங்கப்படுகிறது. இந்தியாவின் முதல் முழுநீள சினிமாவாகக் கருதப்படும் ராஜா ஹரிச்சந்திராவை திரைக்கதை அமைத்து, தயாரித்து இயக்கினார் இவர்.
1969ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் மிகப் பெரும் பங்களித்தவர்களை கௌரவப்படுத்தும் விதத்தில் இந்த விருதை அறிமுகப்படுத்தியது இந்திய அரசு. முதன்முதலாக இந்த விருது இந்திய சினிமாவின் முதல் பெண் என்று கருதப்படும் தேவிகா ராணிக்கு அளிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு பிருத்விராஜ் கபூர், நௌஷத், எல்.வி. பிரசாத், சத்யஜித் ரே, வி. சாந்தாராம், நாகி ரெட்டி, ராஜ் கபூர், லதா மங்கேஷ்கர், நாகேஸ்வரராவ், திலீப் குமார், ராஜ்குமார், சிவாஜி கணேசன், ஆஷா போஸ்லே, யாஷ் சோப்ரா, தேவ் ஆனந்த், மிருணாள் சென், ஷ்யாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், கே. பாலச்சந்தர், குல்ஸார், கே. விஸ்வநாத், அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.