யாழ். தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுகளுமே நேற்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன.
அதிகளவு கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குள் செல்வதற்கோ அனும திக்கப்பட மாட்டார்கள் என்று மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கொடிகாமம் சந்தைக் கொத்தணி உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொடிகாமம் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்கு தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது. இங்கு கடந்த 3 நாட்களில் 30 பேருக்கு கொவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.